
சென்னை: நடிகர் நடிகைகளின் கட்டவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்யும் ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்ய பால் இறக்குமதி செய்ய ஆவின் நிறுவனம் யோசனை செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கட் அவுட் கலாச்சாரமும் போஸ்டர்/பேனர் கலாச்சாரமும் வேரூன்றி இருப்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் /நடிகைகளின் பட வெளியீட்டின் போதும், அவர்களின் பிறந்த நாளின் போதும் அவர்களின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது தங்களது அடிப்படை கடமையாக தமிழ் இளைஞர்கள் நினைக்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் பாலின் டிமாண்ட் அதிகமாகி வருகிறது.
இது குறித்து ஒரு ஆவின் அதிகாரி கூறும்போது, இப்போது எங்களது பிரதான குறிக்கோள் இந்த இளைஞர்களின் பால் தேவையை பூர்த்தி செய்வதுதான். சில சமயங்களில் கோயில்களிலும் பாலாபிஷேகம் செய்ய தேவை அதிகமாக இருக்கிறது. இதை சமாளிக்க பால் இறக்குமதி செய்வதை தவிர வேறு வழியில்லை என்றார்.
இதற்கிடையில், சென்னையை அடுத்த, பாலம்பட்டி கிராமத்தில் பட்டினியால் பல குழந்தைகள் இறந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks