சென்னை: இன்று நடந்த திருமண விழாவில் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வழக்கம்போல் ஒரு குட்டிக் கதை கூறினார். “ஒரு ஊரில் இரு உடன்பிறவா சகோதரிகள் இருந்தனர். ஒரு சகோதரிக்கு உறவினர்கள் யாருமே இல்லை. எனவே ஒரு வளர்ப்பு மகனை தத்தெடுத்து, அவருக்கு திருமணமும் செய்து அழகு பார்த்தார். என்ன கொடுமை இந்த உலகமே அவரை ஏசியது. அதிகாரவர்க்கம் அவரை சிறையிலடைத்து சொல்லணா துயரத்திற்கு ஆளாக்கியது. முடிவில் தொல்லை பொறுக்காமல் வளர்க்காத மகனை தூக்கியெறிந்தார். அடுத்த சகோதரிக்கோ ஊரெல்லாம் சொந்தம், அவரவர் அதிகாரம் செய்து சகோதரியையே ‘டம்மி’ ஆக்கினர். அதனால் ஆட்சி போனது, அதிகாரமும் போனது. நிலைமையை சமாளிக்க உடன்பிறவா சகோதரியையே ஒட்டுமில்லை உறவுமில்லை என்று தள்ளி வைத்தார். சகோதரிப் பிரிவு வாட்டியதால், தோட்டத்தில் சில மாதங்களிலேயே உடன்பிறவா சகோதரிக்கு இடம் கொடுத்தார். அன்று முதல் இன்று வரை சகோதரிகள் இணை பிரியாமல் அடிமைகளை அடக்கி ஆண்டு வருகின்றனர். தனி ஒரு பெண்ணுக்கு சில சொந்தங்கள் வரும்போது, எவ்வளவு துன்பங்களும் வரும் என்பதற்காகத்தான் நான் இந்தக் கதையை இங்கு கூறினேனே தவிர, நீங்கள் யாரையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல” என்றார் ஜெயலலிதா
There are no comments yet
Or use one of these social networks