சென்னை: தமிழக முதல்வரின் உத்தரவையடுத்து டாஸ்மாக் விற்பனை நேரத்தில் இரண்டு மணிநேரம் குறைக்கபட்டதால் வருமானத்தில் 6 சதவீதம் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. டாஸ்மாக்கின் இந்த பின்னடைவை சரிக்கட்டவும், குறைந்த முதலீட்டில் லாபம் ஈட்டவும் தமிழக அரசு புதிய முறையில் மதுவின் ‘கிக்’கை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிமகன்கள் தெரிவித்தனர்.
இது பற்றி கூறப்படுவதாவது: சமீபத்தில் தர்மபுரியில் விற்பனை செய்யப்பட்ட பிரபல நிறுவனத்தின் குளிர்பான பாட்டிலில் பல்லி கிடந்ததால், அதனை வாங்கிய வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார். இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பாட்டிலை ஆய்வு செய்தனர். ஆய்வில் பெட்டிக் கடைக்காரர் குடிமக்களை குஷி படுத்தவே குளிர்பான பாட்டிலில் பல்லி, நட்டுவக்காலி, பாம்பு, பூரான் போன்றவற்றை கலந்து விற்பனை செய்தது தெரிய வந்ததது. இதன்மூலம் குடிமக்களுக்கு தனி ஒரு ‘கிக்’ கிடைப்பதாகவும், டாஸ்மாக் சரக்குகளை விட நன்றாக போதை ஏறுவதாகவும் தெரிவித்தார். வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் விலை டாஸ்மாக் சரக்கை விட குறைவென்றும் தெரிவித்தார். குளிர்பான பாட்டிலில் பல்லி கிடந்த சம்பவம் குடிமகன்கள் மத்தியில் சந்தோஷ சாரலை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த செலவில் கிக் கிடைப்பதற்கு பல்லி, பூரான், தேள் ஆகிய உயிரினங்களை குடி குடிமகன்கள் தேடி அலைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசும் டாஸ்மாக்கின் நஷ்டத்தை ஈடுகட்ட, இதே பல்லி டெக்னிக்கை பயன்படுத்தி டாஸ்மாக் சரக்குகளிலும் பல்லி, பூரான், தேள் சேர்த்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. பல்லி, பூரான், தேள் ஆகியவற்றை சீனாவிலிருந்து முதலில் இறக்குமதி செய்து இத்திட்டத்தை சோதனை செய்யவும், திட்டம் வெற்றி அடைந்தால், கொடைக்கானலில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பல்லி, பூரான், தேள் பூங்கா அமைத்து இங்கிருந்தே சப்ளை செய்யவும் அரசு முடிவு செய்துள்ளதாக நமது செய்தியாளர் குவார்ட்டர் குமார் தெரிவிக்கிறார்.
There are no comments yet
Or use one of these social networks