சென்னை: சமீபத்தில் ராஜ்ய சபாவில் காஷ்மீர் பிரச்னை குறித்து, அனைத்து கட்சி எம்.பி.,க்களும் அனல் பறக்கும் விதமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பேசிய நிலையில், அ.தி.மு.க., – எம்.பி., நவநீதகிருஷ்ணன் “காஷ்மீர், பியூட்டிபுல் காஷ்மீர்” என்று சினிமா பாட்டு, மருந்து, விருந்து என, பல விஷயங்களை பேசி, ராஜ்யசபாவையே, வெளுத்து வாங்கியது அனைவரும் அறிந்ததே. பாடலை முழுவதுமாக பாட ஒப்புதல் கிடைத்தும் அவரால் பாட முடியாமல் சுருதி கொஞ்சம் பிசகியது. இதற்கு காரணம், அவர் அம்மா நடத்தும் ரகசிய பாட்டு கிளாசிற்கு கட் அடித்துவிட்டு பழைய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பார்க்க போனதுதான் என்ற உண்மையை நமது கப்சா நிருபர் கண்டுபிடித்துள்ளார். இருப்பினும் அவர் ஒரே நாளில் பிரபலம் ஆக காரணம், அம்மா அளித்த ரகசிய பாட்டு பயிற்சி தான் என்று கூறப்படுகிறது. டெல்லியில் சொதப்பியதை சரிக்கட்டும் வகையில் சமீபத்தில் அதிமுக ஆதரவில் ஜெயித்து சட்டமன்ற உறுப்பினர் ஆன கருணாசை கொத்தாக அள்ளிய அம்மாவின் அடிபொடிகள் “நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற” என்ற பாடலை கட்டாயப் படுத்தி பாட வைத்து சமூக வலை தளங்களில் உலவ விட்டு அம்மாவின் செல்வாக்கை தூக்கி நிறுத்தினர்.
இதையடுத்து எலிப்படைத் தலைவர் கருணாஸ் சட்டமன்றத்தில் , மக்கள் பிரச்சனையை பற்றி பேசாமல், அடிமைகளுக்கு போட்டியாக சட்டமன்றத்தை கூத்தடிக்கும் இடமாக மாற்றியது அம்மாவை மிகவும் கவர்ந்தது. இப்படி பாடல் பாடுவதன் மூலம், “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..” என்று பாடிய ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் இது அமைந்தது. இதைக்கண்டு ரசித்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், “நீங்க மக்களுக்கு நல்லது செய்யுங்க செய்யாம போங்க, நாட்ட குட்டிசுவர் ஆக்குங்க ஆக்காமா போங்க, ஏன் சட்டசபைக்கு வாங்க வராமலே போங்க, எங்களுக்கும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி போட்டே ஆகணும், ஹாங்க்!” என்று சிவகார்த்திகேயன் குரலில் மிமிக்ரி செய்தனார். இதனால் ஆடல் பாடல் என எதிர்காலத்தில் சட்ட மன்றத்தில் குஷிக்கும் கும்மளத்துக்கும் குறைவிருக்காது என்றும் அம்மாவின் அடிமைகள் நிம்மதி பெருமூச்சு விட்டதாகத் தெரிகிறது. அடுத்த கட்டமாக சினிமாவில் வாய்ப்பிழந்த்த குத்தாட்ட நடிகைகளை வைத்து சட்ட சபையில் “ரிக்கார்டு டான்ஸ்” நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நம்பதாகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி இசையின் தாக்கத்தால் பாட்டு கச்சேரி பார்க்க வரும் பொது மக்களை வரிசைப்படுத்த சட்ட மன்ற வளாகத்தில் தற்காலிக தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
சட்டசபை உறுப்பினர்களின் கலை ஆர்வத்தை கருத்தில் கொண்டு இனி சட்டசபை உறுப்பினர்களுக்கு பாட்டு சொல்லிக்கொடுக்க விஜய் சூப்பர் சிங்கர் புகழ் வாய்ஸ் எக்ஸ்பர்ட் அனந்த் வைத்திய நாதன் அவர்களையும், ஆடல் சொல்லிக்கொடுக்க ஜெயா டிவி டேன்ஸ் ஷோ நடுவர் புகழ் சிம்ரனையும், இசை சொல்லிக்கொடுக்க ஜெயா டிவி புகழ் இசையமைப்பாளர், சமையல் வல்லுனர் ஷிஹான் உசைனியையும் நியமித்து தன் உயிருனும் மேலான பாத்ரூம் பாடகர்களான சட்டமன்ற உறுப்பினர்களை பக்கா பாடகர்களாக்க உமுதல்வர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இந்த பாடாவதி பாட்டு பயிற்சியின் மகுடமாக ஸ்டாலின், கருணாநிதி உள்ளிட்ட குரல்களின் சிறப்பு மிமிக்ரி பயிற்சி பலகுரல் மன்னர் மயில்சாமி மூலம் சிலருக்கு வழங்கப்பட்டு, திமுகவினர் வெளிநடப்பு செய்யும் சமயங்களில் “பிராக்சி” கொடுக்கவும் முதல்வர் முடிவு செய்துள்ளார். இதை அறிந்த மயில்சாமி, விஜயகாந்த் குரலுக்கு பயிற்சி தேவை இல்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், வீட்டில் மானாட, மயிலாட பார்த்துக் கொண்டிருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவசரப்பட்டு ஜெயாவிடம் சண்டையிட்டுக் கொண்டு சட்டமன்றத்தை புறக்கணித்தது குறித்து தனது நெருக்கமானவர்களிடம் வருத்தப் பட்டதாக கோபாலபுர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைவர் சட்டசபைக்குப் போனால் அரசாங்க செலவில் இலவசமாக அங்கேயே ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என்று தலைவர் நினைக்கிறார் என்று தி.மு.க. தொண்டர் ஒருவர் நமது நிருபரிடம் தெரிவித்தார்.
There are no comments yet
Or use one of these social networks