சென்னை: ஆடம்பர திருமணம் என்றாலே, நினைவுக்கு வருவது ஜெயலலிதாவின் (முன்னாள்) வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடந்த திருமணம்தான். அம்மா என்றால் சும்மாவா. உலக அளவில் கின்னஸே அவரது சாதனையை பதிவு செய்து இருக்கிறது. கின்னஸ் வெளியிட்டுள்ள தகவல் படி 07 செப்டம்பர் 1995 அன்று 1,50,000 மக்கள் பங்கேற்ற மிகப் பெரிய திருமண விருந்து 50 ஏக்கர் நிலத்தில் சினிமா கலை இயக்குனர் தோட்டா தரணி செட் போட்டு பந்தல் அமைத்து நடத்தப்பட்டது. இதற்கு ஆன செலவு 75 கோடி ரூபாய் சாப்பாடு செலவு 2 கோடி ரூபாய் ஆகும். இதனை அடுத்து சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற ஜெயலலிதா அந்த சாதனையை மறைக்க அரும்பாடு பட்டு, ஓ பன்னீர்செவம் உள்ளிட்ட அமைச்சர்கள் கண்ணீர் சிந்தி, தீச்சட்டி எடுத்து, மாவிளக்கு போட்டு, தீ மிதித்து, நேர்த்திக் கடன் செலுத்தியதால், நீதிபதி குமாரசாமி மூலம் விடுதலை செய்யப்பட்டார்..திருமணத்திற்கு ஜெயா ரூ 28,68,000/- செலவு செய்ததாக தன் புதிய கணக்கு ஃபார்முலாவை கொண்டு கூட்டிக் கழித்து தீர்ப்பு வெளியிட்டார். (இந்த கணக்கு ஃபார்முலா நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது தனிக் கதை).
ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியின் உடன் பிறந்த சகோதரர் ஜெயராமன், ஜெ.வின் திராட்சைத் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அதன் பிறகு போயஸ்கார்டன் இல்லத்திலேயே வசிக்கும் ஜெயராமன் மனைவி இளவரசியின் மகன்தான் விவேக். ஜெயாவின் மேற்பார்வையிலும், செலவிலும் பட்ட மேற்படிப்பு முடித்துள்ளார் விவேக். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவும், சசிகலாவும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டபோது, தனக்கான மருந்து, மாத்திரை, சாப்பாட்டை கொண்டுவந்து கொடுக்க நம்பிக்கையான நபர் தேவை என்று நினைத்த ஜெயலலிதா, அதற்கான பணியல் இந்த விவேக்கை நியமித்தார் என்று கூறப்படுகிறது. பின் ஜெயாவால் ஜாஸ் சினிமாஸ் சி.இ.ஓ. வாக ஆனார் விவேக்.
தன் மகனைப்போலவே விவேக்கை நினைக்கிறார் ஜெயலலிதா. அவருக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். அதன்படி சென்னை வானகரம் பகுதியில் உள்ள குட்டிச்சுவர் திருமண மண்டபத்தில் விரைவில் எளிமையான முறையில் மணவிழா நடக்க இருக்கிறது. சுதாகரன் திருமண விஷயத்தில் சிறைக்கு சென்று தனது சொத்துகளை இழந்து கடனாளி ஆன ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் ஜெயா தன் சம்பளக் காசுகளான ஒரு ரூபாய் நாணயங்களை சிறுவாடு சேர்த்து முந்தானையில் முடிந்து வைத்த சில்லறை காசுகளை பொறுக்கி எடுத்து இந்த திருமணத்தை மிகவும் சிம்பிளாக நடத்த இருக்கிறார். சிறையில் வேலை செய்து சம்பாதித்த சில ரூபாய்கள் போக மிச்சத்திற்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்டுள்ளார். இதன்படி காலையில் ‘அம்மா உணவகத்தில்’ வடித்த கஞ்சியை தேனீருக்கு பதிலாக வழங்க உள்ளார், காலை டிபன் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய தொன்னையில் உப்பில்லாத உப்புமாவும், மதிய சாப்பாடாக அதே ‘அம்மா உணவகத்தில்’ தயாரான புளித்து போன புளி சாத பொட்டலமும் ஸ்டிக்கர் ஒட்டித்தான் பரிமாறப்படும். தஞ்சாவூரில் உள்ள பேராவூரணி நீலகண்ட விநாயகர் கோவிலில் வரவேற்பு நடைபெறும் என்றும், அந்த கோவில் வழக்கப்படி மேள தாளம் வைக்காமல், அடிமை எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் மேசைகளைத் தட்டுவது போல், “கை தட்டி” ஓசை எழுப்பி திருமணம் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் “பேச்சிலர்ஸ் பார்ட்டி”யில் டாஸ்மாக்கில் மீந்த விஸ்கி, ஒயின் காக்டெயில் சேகரிக்கும் பணியில் அதன் ஊழியர்கள் ரகசியமாக இடம் பெற்றுள்ளனர். இது குறித்து தன் நட்பு வட்டாரங்களில் ஜெயா கூறியதாக போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: டாஸ்மாக் வருமானத்தையும், தினசரி பேருந்து கலெக்ஷனையும் நம்பி எனது அன்றாடங்காய்ச்சி அரசு செயல் பட்டு வருகிறது, இந்த நிலையில் கின்னஸ் சாதனை திருமணம் நடத்திய நான், ஒரு கிண்ணி கூட வாங்க காசில்லாமல் இப்படி மேள தாளம் வைக்க கூட வக்கில்லாமல் “கைதட்டி கல்யாணம்” செய்து வைக்கும் நிலைக்கு வந்து விட்டேனே என்று வருத்தப்பட்டதாக தெரிகிறது.
There are no comments yet
Or use one of these social networks