சென்னை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும், ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை உள்ளவர்கள். ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைபடியே, கட்சி நிகழ்ச்சிகளுக்கு தேதி கொடுக்கின்றனர். வெளியூர்களுக்கு சுற்றுப்பயணம் செல்வதும், ஜோதிடர் ஆலோசனைபடியே நடக்கிறது. அத்துடன், விஜயகாந்த் வீட்டில், அவ்வப்போது யாகங்களும்; பூஜைகளும் நடந்து வருகின்றன. இருப்பினும், சட்டசபை தேர்தலில், கட்சிபடுதோல்வி அடைந்தது. ஆனால், அதற்கு ஜாதக பலன்களை மேற்கோள்காட்டி, ஜோதிடர் சால்ஜாப்பு சொல்லிவிட்டார். இந்நிலையில், ‘கட்சியின்முக்கிய பதவிகளில் உள்ள ராசியில்லாத நபர்களால் தான், கட்சிக்கு பெரும் பின்னடைவு’ என, ஜோதிடர் கூறியுள்ளார். எனவே, அவர்களது பதவிகளை பறிப்பது அல்லது மாற்றி அமைப்பது என, விஜயகாந்த் முடிவெடுத்துள்ளார்.
இது குறித்து மேலும் விபரமறிய உங்கள் நியூஸ் கப்ஸா நிருபர் கேப்டனை அவரது சாலிகிராமம் வீட்டில் உள்ள சிறிய அலுவலகத்தில் சந்தித்தார். சரியான தூக்கமும், மேக்கப்பும் இல்லாமல் கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த விஜயகாந்த் கூறியதாவது: நேரம் சரியில்லை சார். அதோட சாகவாசமும் சரியில்லை. எனது மதுரை ஜோதிடர் மார்த்தாண்ட மாந்த்ரீகர் எனக்கும், பிரேமலதாவுக்கும் சனி திசை ஓடுதுன்னு சொல்றாரு. அதோட பசங்களுக்கும், சுதீசுக்கும் ராகு, கேதுன்னு போய்க்கிட்டு இருக்கு. அதான் நம்மள சுத்தி இருக்கிறவர்களுக்காச்சும் நல்ல திசை இருக்கன்னு பாக்க சொல்லியிருக்கேன். தி.மு.கா.விற்கு ஓடிப்போய், மிச்சம் இருக்கிறவர்களில், செவ்வாய் தோஷம் இருக்க மாவட்ட செயலாளர்களை நீக்கி விட்டு, சுக்கிர திசை, ஓடறவங்களா இருக்கிற மாதிரி நியமிக்க சொல்லியிருக்கேன். வாஸ்து படி கொடியிலே இருக்க மஞ்சளையும் நீக்க சொல்லியிருக்காங்க. அது எப்படின்னா, கலைஞரை பார்த்து நான் மஞ்சளை வெச்சேன், அவருக்கும் யோகமில்லை, எனக்கும் டெபாசிட் போச்சி. அதனால மஞ்சள எடுத்துட்டு வேற என்ன கலர் வைக்கலாம்னு ஜோசியர கேட்டுருக்கேன். அவர் பஞ்சலோக பஞ்சாமிர்த பஞ்சாங்கத்தை பார்த்து சொல்றேன்னு சொல்லியிருக்கார் என்று அப்பாவியாக கேப்டன் பேசுவதை பார்க்க நிருபருக்கே பாவமாக இருந்தது.
There are no comments yet
Or use one of these social networks