சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆத்மா யாரை நினைக்கிறதோ அவரே அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், அதிமுகவில் போட்டியோ, சண்டையோ எதுவும் ஏற்படவில்லை. ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி, அவரது அடியொற்றி இயக்கத்தைக் காக்க ஒற்றுமையோடு தொண்டர்களை காக்கவும், மக்களைக் காக்கவும் அதிமுக தலைவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மற்றும் பொன்மனச் செம்மலின் ஆத்மா யாரை நினைக்கிறதோ, ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த கோட்டையை மேலும் மேலும் யார் வளர்ப்பாரோ அவரையே இந்த இயக்கம் பொதுச் செயலாளராக தேர்வு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மறைந்த முதல்வர் ஆத்மாவை தேடும் வேலையில் அதிமுகவின் பல்வேறு தலைவர்களும் தொண்டர்களும் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமையில் சில தி.மு.க.வினரும், சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க அதிமுக பொருளாளரும் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றோரு தரப்பினரும் மெரினா பீச், போயஸ் கார்டன், சிறுதாவூர் மற்றும் கொடநாட்டில் ஆத்மாவை தேடி அலைவதாக நம்பத்தகாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆத்மா இன்னும் அப்பல்லோவில் தான் இருக்கிறது என்று கேரளா மாந்த்ரீகர் சொன்னதையடுத்து சிலர் அப்பல்லோ விரைந்துள்ளதாக தெரிகிறது.
There are no comments yet
Or use one of these social networks