சென்னை: ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அரசு அதிகாரிகள், போயஸ்கார்டன் சென்று, அவர் முன், கைகட்டி நிற்பது வழக்கம். அவர் மறைந்த பின், அவரது தோழி, சசிகலாவை சந்தித்து, கைகட்டி நிற்கும் நடைமுறையை, பலர் மீண்டும் புதுப்பித்து வருகின்றனர். அரசு பல்கலைகளில், சமீபத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட துணை வேந்தர்கள், போயஸ் கார்டன் சென்று, சசிகலாவை நேரில் சந்தித்தனர். அவர் முன் கைகட்டி நின்று திரும்பினர்.

இது குறித்து, வெளியான புகைப்படத்தை பார்த்த மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம், கார், குடியிருப்பு போன்ற வசதிகளை பெறும், பல்கலை துணை வேந்தர்கள், அலுவலக நேரத்தில், தனி நபர் ஒருவரின் இல்லத்திற்கு ‘அப்பா யின்ட்மென்ட்’ பெற்று சென்றதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது. மாணவர் களுக்கு பாடம் கற்பிக்கும் துணை வேந்தர்கள், தங்கள் நேரத்தை வீணாக்கி, ஒரு தனி நபர் இல்லத் திற்கு சென்று, அவரை சந்தித்துள்ள விதம் வேதனைக்குரியது. துணை வேந்தர்களின் பணி நியமனம் எப்படி நடந் துள்ளது, யார் பின்னணியில் இருந்தனர் என்பதை, இச்சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இந்நிலையில் சசிகலாவை சந்தித்த தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர், பாஸ்கரன்; தமிழ்நாடு டாக்டர்எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, கீதாலட்சுமி; அன்னை தெரசா பல்கலை, வள்ளி; திருச்சி பாரதிதாசன் பல்கலை, முத்துக்குமார்; பாரதியார் பல்கலை, கணபதி, திருவள்ளுவர் பல்கலை, முருகன்; உடற்கல்வி பல்கலை, மூர்த்தி; தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, தங்கசாமி; தமிழ்நாடு கால் நடை மருத்துவ பல்கலை, திலகர்; சட்ட பல் கலையில், கடந்த வாரம் ஓய்வுபெற்ற வணங்கா முடி ஆகியோர் நமது கப்ஸா நிருபருக்கு கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது: நாங்க பெட்டி கொடுத்து பதவி வாங்கியதால், எங்களது பதவிக்கு எப்பவும் நித்திய கண்டம் பூரண ஆயுசுதான். அதனால் யாரு மேலிடத்தில் இருக்காங்களோ அவர்கள் அவ்வப்போது சந்தித்து எங்கள் ஆயுளை உறுதிப்படுத்திக் கொள்வோம். அது மட்டுமல்லாமல், சின்னம்மா அரசியலுக்கு புதுசு என்பதால் கொஞ்சம் அரசியல் நெளிவு சுளிவுகளை சொல்லிக் கொடுத்து பாடம் எடுக்க போயஸ் தோட்டம் சென்றோம். மற்றபடி ராமன் ஆண்டாலும், ஓ.பி.எஸ். ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று கூறினர்.

There are no comments yet