சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே சென்னை நுங்கம்பாக்கத்தில் கப்சா செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு சிகிச்சைகள் மற்றும் நோய் பற்றியும் விளக்கம் அளித்தார்: “சிகிச்சைக்கு கொண்டு வரும்போது ஜெயலலிதா சுயநினைவில் தான் இருந்தார். முதலில் காய்ச்சல் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நோய் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. செப்சிஸ் நிலை ஏற்பட்டதால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிக்கப்பட்டன. சர்க்கரை அளவு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருந்தது. நோய் தொற்றுக்கான காரணத்தை தீவிரமாக ஆராய்ந்தோம். அக். 22ஆம் தேதி அவர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்திருந்தார். பிறகு சின்னம்மாவின் சொல்படி நினைவிழக்கச் செய்தேன். மேலும் ஜெயலலிதாவின் உடலில் தேவையான பொட்டாசியம் இல்லை. இங்கேயே பாரிமுனை காசிசெட்டித் தெருவில் பொட்டாஷ் உர மூட்டை கிடைப்பதால் அவர் லண்டன் சென்று சிகிச்சை பெறுவதை சின்னம்மா விரும்பவில்லை.

தேர்தல் குறித்த ஆவணத்தை ஜெயலலிதா படித்து பார்த்தார். கையெழுத்து இடவிடாமல் சின்னம்மா சொடுக்கு எடுத்துக் கொண்டிருந்ததால், கைரேகை இட வேண்டி இருந்தது. நான் ஜெயாவிடம் கைரேகை பெறும்போது பிரச்சாரத்தின் போது மக்களை பார்த்துக் கேட்பதுபோல் ஜெயலலிதா தொண்டையில் இருந்த சிறிய மைக்கில் “ஆபரேசன் செய்வீர்களா செய்வீர்களா” என்று பேசினார். ஏன் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட வில்லை என செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘புகைப்படத்தில் படத்தில் உள்ள ‘புகை’யால் ஜெயலலிதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுவிடும் என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர். தற்போது அப்பல்லோவில் ரத்தக் கொதிப்பு என்று புளுகிவிட்டு எங்களுக்கு செய்தியாளர் சந்திப்பில் என்ன எப்படி பேச வேண்டும் என்று ‘ஸ்பீச் தெரபி’ கொடுக்க வந்துள்ள சின்னம்மாவின் கணவர் நடராஜன் இருக்கும் வார்டில் சிசிடிவி காமிரா இல்லாததுபோல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட இடத்தில் கேமிரா இல்லை என்று ரிச்சர்ட் பீலே கூறினார்.

நமது கப்ஸா நிருபர் மேலும் திரட்டிய தகவலின்படி, இதற்கு முன்பு தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலையில் சிசிடிவி காமிரா ரயில் நிலையத்தில் நிறுவப்படவில்லை. அது தொடர்பாக ராம் குமார் கைது படலத்தில் ரத்தம் கொட்டும் காட்சியை படமெடுத்த காமிரா கழுத்தை அறுக்கும் போது வேலை செய்யாமல் மக்கர் செய்தது. பின்னர் ராம்குமார் சிறையில் மின்சார ஒயரைக் கடித்து இறக்கும் முன் கேமிரா ஒயரை கடித்துது துப்பிவிட்டு, பிறகு மின்சார கம்பிய கடித்து கபால மோட்சம் அடைந்த்தது போல் முக்கியமான சாட்சிகள் தேவைப்படும் இடங்களிலும், நேரங்களிலும் தமிழ்நாட்டில் காமிரா வேலை செய்யாமல் மக்கர் செய்ய சின்னம்மா உத்தரவிட்டுள்ள ‘சிதம்பர ரகசியம்’ வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

There are no comments yet