சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததற்காக, சேலத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. ‘மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்ப்போம்… இயற்கையைக் காப்போம்’ என்ற வாசகங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை சேலத்தில் விநியோகித்த மாணவி வளர்மதியை, போலீஸார் சில நாள்களுக்கு முன்னர் கைது செய்தனர். ‘அவர் நக்சல் அமைப்புக்கு ஆள் சேர்க்கிறார்’ என்ற குற்றச்சாட்டையும் போலீஸார் சுமத்தினர். அவருக்குத் துணையாக வந்த அவரது தோழியின் தாயாரையும் நக்சல் பட்டியலில் போலீஸார் சேர்த்துவிட்டனர். இவர்கள் இருவரும் கடந்த 13-ம் தேதி காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து சேலம் சிறையிலேயே உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார் மாணவி வளர்மதி. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடிய மாணவி கைது செய்யப்படதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கதிராமங்கலத்தில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று சொல்லிவிட்டு மறுபுறம் ஜனநாயக ரீதியாகப் போராடும் மாணவி, பேராசிரியர் உள்ளிட்டோர் மீதும், கிராம மக்கள் மீதும் கிரிமினல் வழக்குகளை பதிவு செய்வதும் குண்டர் சட்டத்தில் அடைப்பதும் கண்டனத்துக்கு உரியது என்று பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவி வளர்மதி பல்கலைக்கழகத்தில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று போராவியவரான இவர், இயற்கை பாதுகாப்புக்குழு என்ற அமைப்பை சேர்ந்தவர், முதுகலை இதழியல் பயின்று வரும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, கப்சா நிருபரிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “வளர்மதி மீது போட்ட கேஸ் கோர்ட்டில் நிற்காது என்று தெரிந்துவிட்டது. அதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லாதது தான் காரணம். அதனால் தான் சேலம் பல்கலைக்கழகத்திடம் சொல்லி, வளர்மதியை சஸ்பெண்ட் செய்ய சொன்னேன். நக்சல் அமைக்கு ஆள் சேர்க்கும் அவர் எனது பாதுகாப்பு படைக்கு சில ஆள் சேர்த்துவிடும்படி கேட்டேன், அவர் முரண்டு பிடித்து ஜெயிலில் உண்ணாவிரதம் இருக்கிறார். ரொம்ப தொல்லை கொடுத்தால் ஜெயில் ராம்குமாருக்கு கொடுத்த ட்ரீட்மெண்டை வளர்மதிக்கும் கொடுப்போம். சில கல்லூரி மாணவர்கள் என்னிடம் வந்து, வளர்மதி போல் காலஜை ‘கட்’ அடிக்க ஆலோசனை கேட்டனர். அவர்களை வளர்மதி போல் போராட்டங்களில் ஈடுபட சொன்னேன். அதுமாதிரி போராடினால் அரசு உத்தரவுப்படி, கல்லூரி நிர்வாகம் தானாகவே லீவு கொடுத்துவிடும். அவர்களும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்று விட்டனர்.” என்றார்.
There are no comments yet
Or use one of these social networks