சென்னை: திருச்சி விமான நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தாக்க வந்ததாகக் கூறி ஒருவரை அஇஅதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியினர் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியைச் சேர்ந்தவர் சோலைராஜா. உள்ளூர் கட்சிப்பிரமுகரின் உதவியுடன் விமான நிலையத்துக்கு ஓ.பி.எஸ்சை பார்க்க வந்த சோலைராஜா, அவருடன் புகைப்படம் எடுக்க விரும்பியதாக தெரிகிறது. புகைப்படம் எடுக்க ஓ.பி.எஸ் அருகில் சென்றுள்ளார், அப்போது அவர் இடுப்பில் சொருகி இருந்த சிறிய கத்தி கீழே விழுந்துள்ளது. இதையடுத்து பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு அளித்த படையினர் சோலைராஜாவை போலீஸ் வாகனத்திற்கு அழைத்துச்சென்றபோது, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சோலைராஜாவை தாக்கினர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. காவல் துறையின் முதல் கட்ட விசாரணையில், அதிமுக எம்ஜிஆர் மன்ற தொண்டரான சோலைராஜன், பால் பாக்கெட்டை அறுப்பதற்காக கத்தியை வைத்திருப்பது வழக்கம் என்றும், திடீரென உள்ளூர் கட்சிப் பிரமுகர் அழைத்ததால், தனது இடுப்பிலேயே கத்தியை வைத்துக் கொண்டு விமான நிலையத்துக்கு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தின்போது சோலைராஜா குடிபோதையில் இருந்ததாக காவல்துறை அதிகாரிகள் மேலும் கூறினர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் உயிருக்கு தமிழகத்தில் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, அவருக்கு மத்திய காவல் பாதுகாப்பு வழங்குமாறு அவரது ஆதரவாளரான மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர்.மைத்ரேயன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தார். இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இன்று நடந்த சம்பவத்தில் பிடிபட்ட சோலைராஜா கூறுவது உண்மைதானா என்பது பற்றி விசாரிக்க அவரை விமான நிலைய காவல்நிலையத்தில் வைத்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக உள்ளூர் அதிமுகவினர் தெரிவித்தனர். இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பன்னீர்செல்வம் கூறியதாவது: “தினகரன், எடப்பாடி அணியினரால் என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது, ஆரம்ப காலங்களில் பெரியகுளம் மார்க்கெட்டில் வட்டிக்கு கொடுத்து வாங்கி பிழைப்பை ஆரம்பித்தேன். பால் பண்ணை ஆரம்பித்து மிச்ச மீதி பாலை டீக்கடை வைத்து மக்களை ஏமாற்றி பிழைத்தேன். பிறகு சில தந்திரங்களை செய்து அதிமுகவில் அமைச்சரானேன். அம்ம டான்சி வழக்கில் சிறை சென்ற போது, சின்னம்மா காலில் விழுந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்தேன். சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்ததும் மீண்டும் முதல்வரானேன், அம்மா மறைந்தவுடன் நானே நிரந்த முதல்வர் என கனாக்கண்டேன், அது பகல் கனவாகி விட்டது.
பிறகு அம்மா சமாதியில் ‘தியான’ ஸ்டண்ட் அடித்து சின்னம்மாவின் முதுகில் குத்தினேன். பதிலுக்கு சின்னம்மா சமாதியிலேயே குத்திவிட்டு சிறைக்கு சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். எடப்பாடியும் தனியாக அணி திரட்டுகிறார்.. தினகரன் கொடுத்த கெடுவும் முடிந்துவிட்டது. பெரியகுளத்தில் என் மனைவி பெயரில் உள்ள கிணற்றுப் பிரச்சினையும் பூதாகாரமாக கிளம்பி விட்டத்து. இந்த கிணற்றுப் பிரச்சினையில் எனக்கு ஏற்பட்ட அவப்பெயரைத் துடைத்தெறிய விமான நிலையத்துக்கு வந்த ‘குடிமகன்’ ஒருவரை செட்டப் செய்து, அட்டைக் கத்தியை கொடுத்து அனுப்பி உயிருக்கு ஆபத்து உள்ளது போல் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினேன். என் மீது அனுதாப அலையை உண்டு பண்ணி, தமிழகத்தில் நடந்து வரும் பல போராட்டங்களை மக்களை மறக்கடிக்கச் செய்வேன், மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்வேன்.. இது அரசியல் ராஜதந்திரம்..” என்றார்..
There are no comments yet
Or use one of these social networks