சென்னை: முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்று தினகரன் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அ.தி.மு.க. ஆட்சியையும், கட்சியையும் தனது  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அவருக்கு வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 19 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 22-ந்தேதி அந்த 19 எம்.எல்.ஏ.க்களும் கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். அதில் அவர்கள், “முதல்- அமைச்சர்   எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அவரை மாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
மொத்தம் உள்ள 134 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 21 பேர் டி.டி.வி. தினகரனை ஆதரிப்பதால் எடப்பாடி பழனிசாமி பக்கம் 113 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாண்மைக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுவதால் எடப்பாடி பழனிசாமியை சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.  இது தொடர்பாக  மு.க.ஸ்டாலின்  வழக்கு தொடர்ந்து உள்ளார்.

சபாநாயகர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த  வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘டி.டி.வி.தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று தற்போது கூற முடியாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கிவிட்டது. டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

சபாநாயகர் எடுக்கும் முடிவில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது. பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்குடன் இதைச் சேர்க்கக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார். இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், ‘செப்டம்பர் 20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது’ என்று கூறி, டி.டி.வி.தினகரன் மற்றும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
பகிர்

There are no comments yet