Reproduced from Shyam Shanmugaam
அதிமுகவின் பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதால் சசிகலா தற்காலிகப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று தரப்பட்ட அதிமுக பிரமுகர் கே.சி.பழனிச்சாமியின் மனுவும் தேர்தல் கமிஷன் விசாரணையில் இணைக்கப்பட்டுள்ளது. அது 2017 ஜனவரி மாதத்தியது.
முதலில் தீர்வு காணவேண்டியது தனது கோரிக்கை தான் என்று கேசிபி வற்புறுத்தி ஆணையத்திற்கு நேற்று அனுப்பிய மனுவின் நகலையும் படித்துப் பார்த்தேன். அதன்படி அதிமுகவின் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்தெடுக்கப்படவேண்டும். am k –
*அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை 6 மாதத்தில் நடத்த வேண்டும்
*பொதுச்செயலாளர் பதவி இனி கிடையாது என்ற பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராகவும், அதிமுகவின் விதிமுறைகளில் தேர்தல் ஆணையம் எந்த மாற்றமும் செய்யக்கூடாது
*இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என்றும், அடிப்படை உறுப்பினர்களின் உரிமைகளை காக்க வேண்டும்
எனவே சசிகலா தேர்வு எப்படிச் செல்லாதோ அதே போல் ஓபிஎஸ், இபிஎஸ் தேர்வும் செல்லாது. அதிமுக சட்டத்தை மாற்றும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அதாவது ஓபிஎஸ் – இபிஎஸ் செப் 12ல் கூட்டிய பொதுக்குழுவை நிராகரிக்கிறார் கே.சி.பழனிச்சாமி.
ஒரு கட்சியின் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படித் தேர்தல் ஆணையத்துக்குத தெரிவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவை ஆவணங்களில் இருக்கும்.
எனவே சமீபத்தில் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், நிர்வாகிகள் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, மாநிலங்களவை எம்பி வி.மைத்ரேயன், முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்தனர்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததற்கான ஆவணங்கள், பொதுக்குழுவில் சட்டப்படியாக இணைப்புக்கு ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் மற்றும் அதிமுகவில் புதிதாகச் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவற்றை அவர்கள் அளித்தனர்.
மேலும், பெரும்பான்மை எம்எல்ஏக்கள், தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது என்பதற்கான ஆவணங்கள், பொதுக்குழுவில் பங்கேற்ற உறுப்பினர்கள், அவர்கள் அளித்த ஒப்புதல் தொடர்பான விவரங்கள் ஆகியவையும் அளிக்கப்பட்டன. இரு அணிகளும் பிரிந்திருந்தபோது சமர்ப்பிக்கப்பட்டிருந்த பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெறுவதாகவும் கடிதம் அளித்தனர்.
சசிகலா தற்காலிகப் பொதுச் செயலாளர் நியமனம் ரத்து, அதன் மூலம் தினகரன் நியமனம் ரத்து ஆகியவற்றுக்கான தீர்மானங்களையும் அளித்தனர். சசிகலா நியமனத்தை ரத்து செய்து இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்தும் உரிமையைத தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரினர்.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சமீபத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கிணங்க ஓபிஎஸ், மதுசூதனன், சசிகலா, தினகரன் ஆகியோருக்குத தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
செப்.29-ம் தேதிக்குள், ஜெயலலிதா மறைந்தபோது இருந்த (டிச 5) பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியல், தற்போதுள்ள எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பட்டியல் போன்றவற்றைச சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அக். 6ஆம் தேதி இரு தரப்பும் நேரில் ஆஜராகி இறுதி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் டிடிவி கால அவகாசம் கேட்டார். அதற்கு மறுத்த தேர்தல் ஆணையம் அதிமுகவின் தற்போதைய நிலையையும் கணக்கில் கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. அதாவது அதன் நிலைப்பாட்டிலேயே முரண்கள்>
சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தில் தேர்தல் கமிஷன் அகிலேஷ் யாதவ் குழுவுக்கே சைக்கிள் சின்னம் சொந்தம் என்று தீர்ப்பளித்தது. அப்போதும் சரி, அதற்கு முன்பும் சரி, “மெஜாரிட்டி டெஸ்ட்” என்ற ஒரே அளவுகோலையே அது பயன்படுத்தியது.
அதன்படி ஒரு கட்சியில் பிளவு ஏற்பட்டால் எம்.எல்.ஏ. எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகளில் பெரும்பான்மை எந்தப் பக்கம் இருக்கிறார்களோ அதையே உண்மையான கட்சியாகத தேர்தல் கமிஷன் இதுவரை அங்கீகரித்து வந்திருக்கிறது.
எனவே இரட்டை இலைச் சின்னமும், அதிமுக என்ற பெயரும் தங்களுக்கே கிடைக்கும் என்று எடப்பாடி- ஓபிஎஸ் காம்போ நம்புகிறது. ஆனால் பொதுக்குழுத தீர்மானத்தின் இறுதி ஒப்புதல் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் உள்ளதால் 2017 செபடம்பர் 12 ஆம் தேதி கூட்டப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்குத் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைக்காது என்று டிடிவி தரப்பு எண்ணுகிறது.
ஆகையால் அக்டோபர் 6ஆம் தேதி இறுதி விசாரணையைத் துவங்கும் தேர்தல் ஆணையம் இரட்டை இலைச சின்னம் யாருக்கு என்ற முடிவை அன்றைய தினமே அறிவிக்குமா என்பது சந்தேகமே!
சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த் வாய்தா அக்டோபர் 24 தான். கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் ஒரு விஷயத்தில் தேர்தல் கமிஷன் முடிவு எடுக்காது. அப்படி அது ஒரு பக்கம் சாய்ந்தாலும் எதிர்ததரப்பு சுப்ரீம்கோர்ட்டில் முறையிட்டுத் தடையாணை பெற்றுவிடும்.
அப்படி நடந்தால் தேர்தல் கமிஷன் பெரிய அக்கப்போரில் சிக்கிக் கொள்ளும். அதிலிருந்து மீண்டபிறகே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அது யோசிக்கும். அல்லது எடப்பாடி – ஓபிஎஸ் காம்போ அறிவுரையில் அந்த மனு கேசிபியால் திரும்பப் பெறப்படுமா என்று தெரியவில்லை.
இத்தகைய நுட்பமான பிரச்னை எதற்குள்ளும் போகாமல் அதிமுக என்ற கட்சியின் பெயர், அதன் சின்னம் ஆகிய இரண்டை மட்டுமே வரையறை செய்தும் தேர்தல் கமிஷன் தன் முடிவைக் கூறலாம்.
அப்படி என்றால் தேர்தல் கமிஷனின் ஆணை நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டும். அதன் மூலம் இன்னொரு ஒரு நிழல்யுத்தம் தொடங்கும்.
There are no comments yet
Or use one of these social networks