ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் டி.டி.வி. தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 4-ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 59 பேர் களத்தில் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் கேட்ட தொப்பி சின்னத்தை, நமது கொங்கு முன்னேற்றக் கழகம், தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எழுச்சித் தமிழர் முன்னேற்றக் கழகம் எனப் பதிவு செய்யப்பட்ட மூன்று கட்சிகள் கோரின. இதையடுத்து, குலுக்கல் முறையில் நமது கொங்கு முன்னேற்றக் கழக வேட்பாளர் ரமேஷூக்குத் தொப்பி சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதேபோல், தினகரன் கோரிய மற்ற சின்னங்களான விசில் மற்றும் பேட் ஆகியவையும் வேறு வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்துக்கு, தனது ஆதரவாளர்களான வெற்றிவேல், செந்தில் பாலாஜி மற்றும் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் உள்ளிட்டோருடன் மாலை 4.20 மணிக்கு வந்த தினகரன், தேர்தல் அலுவலருடன் சின்னம் தொடர்பாகப் பேசினார். அவர் கேட்ட சின்னங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படவே, தேர்தல் ஆணையம் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கியுள்ள சின்னங்களிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அப்போது, பிரஷர் குக்கர் சின்னத்தைத் தனக்கு ஒதுக்கும்படி தினகரன் கேட்டுக்கொண்டார்.
அதன்படி, பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்படவே, வெளியில்வந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் தினகரன். ’’வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். ஆயிரத்தெட்டு தொல்லைகள் எங்களுக்குக் கொடுக்கப்பட்டாலும், அதைப் படிக்கற்களாக்கி எதிரிகளுக்கு பிரஷர் (ரத்தக் கொதிப்பு) கொடுக்கவே பிரஷர் குக்கர் சின்னத்தைத் தேர்வு செய்தேன். தேர்தல் பணிகளை அடுத்த பத்தாவது நிமிடத்தில் தொடங்கிவிடுவேன்’ என்றார். அவர் கூறியதுபோலவே அடுத்த சில நிமிடங்களில் தினகரனின் புகைப்படங்களுடன், பிரஷர் குக்கர் சின்னம் அடங்கிய போஸ்டர்கள் மூலம் ஆன்லைனில் கேன்வாஸைத் தொடங்கிவிட்டார்கள் அவரது ஆதரவாளர்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் தினகரன் சின்னமான குக்கரில் சமைத்தால் சாப்பிடமாட்டேன் என்று தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்வதாக நமது கப்ஸா நிருபர் தெரிவிக்கிறார்.