மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறி இன்று (புதன்கிழமை) ஒரு காணொளியை வெளியிட்டார் தினகரன் அணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பி. வெற்றிவேல்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. அவர் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று ஜெயலலிதா சிகிச்சை பெறும் காணொளியை வெளியிட்டு பேசிய அவர், “அம்மா (ஜெயலலிதா) உயிரோடு இருந்தாங்க என்பதை காண்பிக்கிற வீடியோவை கூட காண்பிக்க விடாம என்னை பல விதங்களில் தடுத்து பார்த்தார்கள்.பல தடைகளை தாண்டிதான் இங்கே வந்திருக்கேன்.” என்றார்.

ஜெயலலிதாவை பற்றி பல வதந்திகள் பரப்பப்படுகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த காணொளியை வெளியிட்டேன் என்றார்.

அவர், “அவருடைய(ஜெயலலிதா) மரணம் குறித்து பல சந்தேகங்களை எழுப்புகிறார்கள். அதை நிறுத்திவிடுவார்கள் என்று பார்த்தால், நிறுத்தப்படுவதாக தெரியவில்லை. அதற்காகதான் இந்த வீடியோவை வெளியிட்டேன்.” என்றார்.

தன்னிடம் மேலும் சில வீடியோக்கள் உள்ளதாகவும், தேவைப்பட்டால் அதனையும் வெளியிடுவோம் என்றார் வெற்றிவேல்.

“என்னை எல்லா வழிகளிலும் தடுக்கப்பார்க்கிறார்கள். அம்மா உயிரோடு இருந்ததையே சொல்லக்கூடாதுன்னு சொல்றாங்க.. ஒரு மிகப்பெரிய தலைவரை, அவர் இறந்த பிறகு தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகிறார்கள். இதை எதிர்கட்சிகள் செய்தால் அது வேறு விஷயம், அவர்களுக்கு ஏதேனும் அரசியல் ஆதாயம் இருக்கும்… ஆனா, இதை செய்வது அனைத்தும் அரசாங்கம்…” என்று குற்றம் சுமத்தினார்,

மேலும், “இது மற்றும் அல்ல

வெற்றிவேல்

, வேறு சில ஆதாரங்களும் அம்மா குறித்து உள்ளது. அம்மாவை கொச்சைப்படுத்த யார் முயற்சித்தால் இனிமேல் சும்மா இருக்க மாட்டோம். நடவடிக்கையும் எடுப்போம்” என்றார்.

தமிழ் நாட்டு மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் இன்று உண்மைதன்மை வெளியிடப்பட்டு இருக்கிறது. மருத்துவமனையில அம்மா டி.வி. பார்த்துக்கிட்டு, ஜூஸ் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க என்றார்.

செய்தியாளர்கள் ஆர்.கே நகர் தேர்தல் சமயத்தில் இந்த வீடியோ வெளியிடப்படுவதற்கு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்று கேட்டதற்கு, “தேர்தல் குறித்து இப்போது பேசாதீர்கள். தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ” என்றார் வெற்றிவேல்.

“இந்த வீடியோ மருத்துவமனையில் எடுக்கப்பட்டது. முழு விவரத்தை எங்கு தெரிவிக்க வேண்டுமோ அங்கு தெரிவிப்போம்.” என்று கூறினார்.

விசாரணை ஆணையம் என்னை அழைக்கவில்லை. அழைத்தால் இந்த வீடியோவை அவர்களிடம் கொடுப்போம் என்று தெரிவித்தார்.

இந்த காணொளியை வெளியிடுவது தொடர்பாக சசிகலாவிடம் அனுமதி பெறவில்லை என்று வெற்றிவேல் கூறினார்.

பகிர்