லைகா நிறுவனத்தின் தென்னிந்திய செயல் பிரிவு அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ரஜினி தொடங்கவுள்ள கட்சியில் இணைந்துள்ளார் ராஜு மகாலிங்கம்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘2.0’. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இப்படத்தை முழுமையாக செயல்படுத்தி பணிபுரிந்து வருகிறார் ராஜு மகாலிங்கம்.
இவர் லைகா நிறுவனத்தின் தென்னிந்திய செயல் பிரிவு தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். தற்போது ‘2.0’ படத்தோடு தனது பணியை ராஜினாமா செய்திருக்கிறார். அவருக்குப் பதிலாக கருணாமூர்த்தி பணிபுரிவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ரஜினி தொடங்கவுள்ள கட்சியில் இணைந்திருக்கிறார். ரஜினியோடு இணைந்திருப்பது குறித்து ராஜு மகாலிங்கம் “2.0 படப்பிடிப்பின்போது ரஜினியை நான் நெருக்கமாக கவனித்தேன். அவரது கடமை உணர்வு, நேர்மை, அர்ப்பணிப்பு என்னை அவரது கட்சியின்பால் ஈர்த்துள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
இதுவரை ரஜினி தொடங்கவுள்ள கட்சியில் யாரெல்லாம் முக்கிய பொறுப்பில் இருப்பார்கள் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது. தற்போது முதல் நபராக ராஜு மகாலிங்கம் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.