நாகை: மாயூரநாதர் கோவிலில் உள்ள அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அபயாம்பிகை உடனாகிய மாயூரநாதர் கோயில் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் அபயாம்பிகை தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். அபயாம்பிகை அம்மனுக்கு நாள்தோறும் 6 கால பூஜை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் குருக்கள் மாறி மாறி பூஜை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வந்த ராஜ் மற்றும் கல்யாணம் ஆகிய குருக்கள் அபாயம்பிகை சன்னதிக்கு  திடீரென்று சுடிதார் அலங்காரம் செய்து பூஜை செய்ததை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்து கோவில்களில் பொதுவாக அம்மனுக்கு பட்டு அணிவித்து பூஜை செய்வதுதான் வழக்கம். கர்ப்ப கிரகத்தில் உள்ள அபயாம்பிகை சிலையை புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சுடிதார் அலங்காரத்தில் அம்மன் இருப்பதை கண்ட ஒருசிலர் தங்களது செல்போனில், படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வளைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அம்மனுக்கு சுடிதார் அணிவிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த ராஜ் குருக்கள் உள்ளிட்ட இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆகம விதகளுக்கு மாறாக அம்மனுக்கு ஆடை அலங்காரம் செய்ததாக கூறி திருவாவடுதுறை ஆதினம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

பகிர்