மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் ஆட்சிக்கு ஆபத்து என்று சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, ”எனக்கு ஜோதிடம் தெரியாது” என்று பதில் அளித்தார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தைப் பார்வையிட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை 4 மணிக்கு வருகை தந்தார். செய்தியாளர்களிடம் பேசும்போது, “மாவட்ட நிர்வாகம் விரைவாகச் செயல்பட்டு விபத்தை தடுத்துள்ளது. விரைவில் சேதங்களை மதிப்பீடு செய்யப்படும். அதன் பிறகு ஆறு மாத காலத்துக்குள் ஆகம விதிகளின்படி சேதமான பகுதிகள் சீரமைக்கப்படும். கோயிலின் உள்ளே அமைந்துள்ள கடைகளால்தான் விபத்து ஏற்படுவது எனத் தெரிந்தால் கடைகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
ஆலய பாதுகாப்பு க்கு ஆய்வின் மூலம் கோயில்களில் விபத்து ஏற்படுத்துவது தடுக்கப்படும். தனியாகத் தீயணைப்பு நிலையம், தானியங்கி மூலம் செயல்படும் தீயணைப்பு கருவிகள் அமைக்கப்படும். அறநிலையத்துறை வசம் இருந்தால்தான் கோயில் நிர்வாகம் சிறப்பாக இருக்கும்” என்றவரிடம், “ஆட்சிக்கு ஆபத்து என்ற ஜோசியம் குறித்து மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் ஆட்சிக்கு ஆபத்து என்று சொல்லப்படுகிறதே” என்று கேட்டதற்கு, எனக்கு ஜோதிடம் தெரியாது, அதைப்பற்றி கூற விரும்பவில்லை” என்று கூறிவிட்டுச் சென்றார்.