சென்னை போயஸ்கார்டன் இல்லத்துக்கு வந்த நடிகர் கமல் ஹாசனை சந்தித்தபின் பேசிய நடிகர் ரஜினி காந்த், என் பாணி வேறு, கமல் பாணி வேறு, அரசியல் கட்சி தொடங்கும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன், வரும் 21-ம் தேதி முதல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் இல்லத்தில் தனது கட்சிப் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேபோல நடிகர் ரஜினிகாந்தும், அரசியல் பிரவேசத்தை அறிவித்து, தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தனது மக்கள் மன்றத்துக்கான நிர்வாகிகள் சேர்க்கை, நியமனம், ஆலோசனைகள் என பரபரப்பாக இயங்கி வருகிறார்.

இந்நிலையில், போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை இன்று நண்பகல் நடிகர் கமல் ஹாசன் திடீரென சந்தித்துப் பேசினார். இருவரும் 30 நிமிடங்கள் வரை ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த சந்திப்பு முடிந்தபின் நிருபர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நண்பர் நடிகர் கமல்ஹாசனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவன் அவருக்கு நல்ல உடல்நலத்தையும் ஆசியையும் தர வேண்டும் என பிரார்த்திக்கிறேன். பணத்துக்கோ, புகழுக்கோ கமல்ஹாசன் அரசியலுக்கு வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நோக்கில் வந்துள்ளார். அதுதான் நமக்கு தேவை.

சினிமாவில் என் பாணி வேறு, நடிகர் கமல்ஹாசன் பாணி வேறு என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோலத்தான் அரசியலிலும் எனது பாணியும், அவரின் பாணியும் வேறுபட்டு இருக்கும் ஆனால், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் இருவரின் குறிக்கோள்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பகிர்