மறைந்த ஜெயேந்திர சரஸ்வதியின் இயற்பெயர் (பூர்வாசிரமப் பெயர்) சுப்ரமணியன். இவரது தந்தை ரயில்வே துறையில் பணியாற்றியவர். ஆறு ஆண்டுகள் சங்கரமடத்தின் வேதபாட சாலையில் பயின்ற சுப்ரமணியன், 1954ல் ஜெயேந்திர சரஸ்வதி எனப் பெயர் மாற்றம் பெற்று சங்கர மடத்தின் பீடாதிபதியானார். தொடக்க காலத்தில், பெரிதாக செய்திகளில் அடிபடாத ஜெயேந்திர சரஸ்வதி, 80களிலிருந்தே மடத்தின் சமயச் செயல்பாடுகளுக்கு மாறான செயல்களில் ஈடுபட்டதாகக் கருதப்பட்டவர். ஜெயேந்தரன் சங்கராச்சாரி தனது 19 வயதில் காஞ்சி மடத்திற்கு இளைய பீடாதிபதியாக பதவியேற்றபோது, இந்த நியமனம் இந்து மதத்தை பாதிக்கும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த 1994ஆம் ஆண்டில் காஞ்சி பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் காலமான பின்னர், மடத்தின் பொறுப்புக்கு ஜெயேந்திர சுவாமிகள் வந்தார். ஜெயேந்திர சரஸ்வதி சம்பந்தப்பட்ட மிகப்பெரிய சர்ச்சை 1987ல் வெடித்தது. அந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி யாரிடமும் சொல்லாமல், மடத்தைவிட்டு வெளியேறினார் ஜெயேந்திரர். சங்கராச்சாரியாராக இருப்பவர்கள் எப்போதும் தன் தண்டத்தை (சங்கராச்சாரியார் கையில் வைத்துள்ள ஒரு புனிதக் கழி) பிரியக் கூடாது என்பது மரபு. ஆனால், ஜெயேந்திரர் மடத்தைவிட்டு வெளியேறியபோது, தன் தண்டத்தையும் கமண்டலத்தையும் விட்டுவிட்டே வெளியேறினார். சாதுர்மாஸ்ய பூஜை காலத்தில் பீடாதிபதிகள் வெளியேறக்கூடாது என்ற விரதத்தையும் மீறி அவர் வெளியேறியது மடத்தின் பக்தர்களுக்கு பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அந்த காலகட்டத்தில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து மூத்த சங்கராச்சாரியாரான சந்திரசேகர சரஸ்வதி, மடத்தின் பூஜைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக புதிய மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதியை நியமித்தார் (அதற்கு முன்பே, விஜயேந்திர சரஸ்வதி ஜெயேந்திர சரஸ்வதிக்கு அடுத்த நிலையில் இருந்துவந்தார்.). மூன்று நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கர்நாடக மாநிலத்தின் தலைக்காவிரியில் ஜெயேந்திர சரஸ்வதி கண்டுபிடிக்கப்பட்டார். தண்டத்தைவிட்டு வெளியேறியது குறித்து அந்தத் தருணத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, தண்டத்தின் சக்தியை தன் உடலில் ஏற்றிக்கொண்டதாக பதிலளித்தார் ஜெயேந்திரர். விஜெயேந்திரர் பொறுப்பேற்றுக்கொண்டதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார். இதற்குப் பிறகு செப்டம்பர் 17ஆம் தேதியன்று காஞ்சி மடத்திற்குத் திரும்பிய ஜெயேந்திரர், மீண்டும் மடாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு அடுத்த இரு வாரங்களிலேயே, அதாவது அக்டோபர் 2ஆம் தேதியே ஜன கல்யாண், ஜன ஜாக்ரண் என்ற புதிய இயக்கங்களை அரசியல் கட்சிகள் போல் ஆரம்பித்தார் ஜெயேந்திரர். மக்களுக்கு சேவை செய்வதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இதன் இரண்டு நோக்கங்கள் என்று இதன் துவக்கவிழாவில் பேசினார் ஜெயேந்திரர். இந்த இயக்கத்திற்கும் மடத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் சந்திரசேகர சரஸ்வதியின் ஆசிகள் இதற்கு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
காஞ்சி சங்கர மடத்திற்கு குடியரசுத் தலைவர் போன்ற உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள் வருவது வழக்கம்தான் என்றாலும் 1998ல் மத்தியில் பா.ஜ.க. அரசு ஏற்பட்ட பிறகு இது பெரிய அளவில் அதிகரித்தது. மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள பல பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்கள் காஞ்சி மடத்திற்கு வந்து ஜெயேந்திர சரஸ்வதியைச் சந்தித்துச் சென்றனர். 2001-2006 காலகட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியின் துவக்க ஆண்டுகளில் தமிழக அரசில் பெரும் செல்வாக்குடன் ஜெயேந்திர சரஸ்வதி விளங்கினார். காஞ்சி மடம் என்பது பணக்கார மடமாக கருதப்படுகிறது. இந்த மடத்தின் நிர்வாகத்தின் கீழ் பல்வேறு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி, பல்கலைக் கழகம், கல்வி நிலையங்கள் ஆகியவை உள்ளன. மத்தியில் இருந்து மத்திய அமைச்சர்கள், பிரதமர், ஜனாதிபதி என யார் வந்தாலும் காஞ்சி மடத்திற்கு செல்லாமல் செல்ல மாட்டார்கள். இது ஒரு அரசியல் அதிகார மடமாகவும் இருந்து வந்துள்ளது. அயோத்தி பிரச்சனையில் கட்டப்பஞ்சாயத்து மூலம், சமரச பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டவர் ஜெயேந்திரர். ஆன்மீக (அரசியல்)வாதிகள் வட்டாரத்தில் கோலோச்சி இருந்தவர்.
பாஜக கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்தபோதே நரேந்திர மோடி, சங்கராச்சாரியாரிடம் ஆசி பெற்றார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் வந்திருந்தார். இதைத் தொடர்ந்து காஞ்சி மடம் பாஜக ஆட்சியில் இந்துக்களை கை ஓங்கி முக்கியத்துவம் பெற்றிருந்த நிலையில் ஜெயேந்திரர் மறைந்திருப்பது காஞ்சி மட பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சில வாரங்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் சர்ச்சையில் சிக்கிய சின்ன சங்கராச்சாரி விஜயேந்திரன் அளிக்காத பேட்டியில் கூறும்போது, “இதுவரை ஸ்டாலின் போல் செயல் தலைவராக இருந்து வந்தேன். இப்போது தலைவர் மறைந்து விட்டதால், நான் எனக்கு வாரிசு தேடிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். கல்லூரி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாததை கண்டித்து எனக்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்தன. இது போல் என் தலைக்கு மேல் ஏகப்பட்ட வேலைகள், ஒரு அசிஸ்டண்ட் தேவைப்படுகிறார். கடவுள் மறுப்பை தலையாய கொள்கையாக கொண்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இந்துத்துவ கொண்டையை மறைக்க மறந்து, எங்களுக்கு ஆறுதலாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். காஞ்சி மடம் போலவே, வாரிசு அரசியலுக்கு பேர் பெற்ற என்னைபோன்ற செயல் தலைவரான அவரிடம் ஆலோசனை பெற்று உதயநிதி போல் ஒரு வாரிசை கண்டு பிடிக்கப் போகிறேன்.” என்றார்.
பகிர்