அன்றாட பிரச்சினைகளுக்கு பதில் அளிக்க மாட்டேன் என்று ஏற்கெனவே நான் சொல்லிவிட்டேன், உங்களுக்கு எத்தனை தடவைதான் சொல்வது என்று காட்டமாக ரஜினி பேசி உங்கள் நியூஸ் கப்சா நிருபர் உள்ளிட்ட பத்திரிகையாளர்களை கடுப்பேற்றி உள்ளார். ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அரசியல் பிரவேசம் குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவித்தபோது அவரது பேச்சு புயலை கிளப்பியது. இதைத் தொடர்ந்து அவரிடம் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியே வரும்போது உள்ளே போகும் போது பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு சிலவற்றுக்கு பதில் அளிப்பார். சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருந்தார் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.

அதற்கு அவர் டிசம்பர் 31-ஆம் தேதி சொல்லிவிட்டேன். நான் இன்னும் அரசியல் களத்தில் இறங்கவில்லை என்று. இறங்கிவிட்டால் நீந்திதான் ஆகவேண்டும். அதுவரை அன்றாடம் நிகழும் பிரச்சினைகளுக்கு பதில் அளிக்க மாட்டேன் என்று அப்பவே சொல்லிவிட்டேன். இன்னும் எத்தனை முறைதான் சொல்வது என்று கேட்டுவிட்டு சிரித்தார். அரசியல் என்பதே மக்களின் அன்றாட பிரச்சனையை பேசி தீர்ப்பதுதான், அதை குறித்து கேள்வி கேட்க கூடாதென்றால் பிறகு என்ன கூந்தலுக்கு அரசியலுக்கு வந்தீரு என்று கோபப்பட்டு பி.பி. எகிற டென்ஷனான கப்சா நிருபரை அருகிலிருந்த பிரபல பத்திரிகையாளர்கள் ஆசுவாசப்படுத்தினர். அதானே.. அம்மா உணவகத்தில் ஏன் உப்புமா போடலை..ராகவேந்திரா மண்டபத்துல ஏன் கறிவிருந்து போடலை, குரோம்பேட்டையில ஏன் பஸ் நிறுத்தலை..லதா ஏன் வாடகை கொடுக்கலை.. காவேரி டேங்க்ல ஏன் தண்ணி விடலை.. நெடுவாசல்ல குழாய் ஏன் போடுறாங்க..இப்புடி 30 வருசத்துக்கும் மேலாக அன்றாடம் நடக்கும் பிரச்சினைகளை எல்லாம் அவர் கிட்ட கேட்டா எப்புடி? எதாச்சும் புது இந்தியா பிறக்குதா.. அதைப்பற்றி கேட்டா.. கடைசியாக வந்த தகவல் (உத்தரவின்) அடிப்படையில் பட்டுன்னு பதில் சொல்லுவாரு.. என்றார் மற்றொரு நோஞ்சான் நிருபர். ரஜினி சார், உங்களுக்கு அரசியல் சரி வராது… பேசாமல்இன்னும் நாலு படத்தில் நடித்து விட்டு, மிச்சம் உள்ள வாழ்க்கையை அமைதியாக ஆன்மீகத்தோடும், உங்கள் குடும்பத்தோடும் செலவிடுங்கள்..அது உங்கள் மீது உள்ள மரியாதையை காப்பாற்றும். என்றார் பட்டையும் கொட்டையுமாக ஒரு நிருபர்.
