
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறும்போது, “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையால் சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் வேறு நகரங்களுக்கு மாற்றப்படும் என்ற கருத்து நிலவுகிறது.அது உண்மையல்ல. சென்னை ஆட்டங்களை மாற்றும் திட்டம் ஐபிஎல் நிர்வாகத்திடம் இல்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் தினங்களில் கூடுதல் பாதுகாப்பு தருவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர். எனவே திட்டமிட்டப்படி போட்டிகள் சென்னையில் நடைபெறும். ஏப்ரல் 10 ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று நான் உறுதி அளிக்கிறேன். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தயவு செய்து அரசியலாக்காதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார். அரசியல் கட்சியினர், பல் வேறு அமைப்பினரின் எதிர்ப்பை மீறி சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இதையடுத்து போட்டி நடக் கும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் ஆகிய பகுதிகளில் 2 ஆயி ரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ரசிகர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகளை நடத்தினால், இளைஞர்களின் கவனம் திசை திரும்பிவிடும் எனக் கூறி இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பை மீறி போட்டிகளை நடத்தினால் சேப்பாக்கம் மைதானத்தையும், கிரிக்கெட் வீரர்கள் தங்கும் ஹோட்டல்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. போட்டியில் பங்கேற்பதற்காக ஏற்கெனவே சென்னை வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், அடையாறு கிரவுன் பிளாசா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானத்துக்கும் வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாநகர கூடுதல் ஆணையர் சாரங்கன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பயிற்சிக்காக மைதானத்துக்கு வரும் வீரர்களின் வாகனங்களுக்கு முன்னும் பின்னும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. சேப்பாக்கம் கிரிக் கெட் மைதானத்தின் சுற்றுச்சுவர்களின் உயரத்தை அதிகரிக்கும் வகையில், தகரத் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டி நடக்கும்போது மைதானத்தின் நுழைவாயில் பகுதிகளில் கூடுதல் போலீஸாரை நிறுத்தவும், கடுமையான சோதனைகளுக்கு பிறகே ரசிகர்களை உள்ளே அனுமதிக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர். மேலும், மைதானத்தைச் சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தை நிறுத்தவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர். பாதுகாப்புப் பணியில் சுமார் 2 ஆயிரம் போலீஸார் ஈடுபடவுள்ளனர். போட்டியின்போது மைதானத்தில் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக ரசிகர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொடிகள், பேனர்கள், செல்போன், லேப்டாப், கேமரா, பட்டாசுகள், ஊதுகுழல்கள், தண்ணீர் பாட்டில் உட்பட எதையுமே உள்ளே எடுத்துச் செல்லக் கூடாது என்று மைதான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் அனுமதி டிக்கெட் தவிர வேறு எதுவுமே ரசிகர்களிடம் இருக்கக் கூடாது என்று போலீஸாரும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:-
* சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு கார் சாவிகள், பைனாகுலர், பட்டாசுகள், கேமராக்கள், குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரக்கூடாது
* சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு பேனர்கள், கொடிகள், பதாகைகளை ரசிகர்கள் கொண்டுவரக்கூடாது
* தண்ணீர் பாட்டில், கொடி, பதாகைகள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை
* மைதானத்தை சேதப்படுத்தினால் போலீசாரிடம் ஓப்படைக்கப்படுவார்கள்.
* இன வெறியை தூண்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்.
* ரசிகர்கள் மைதானத்திற்குள் செல்போன், கேமிரா கொண்டு வர அனுமதி கிடையாது.
* தேசிய கொடியை அவமதித்தால் உடனடியாக கைது என எச்சரிக்கை.
* சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடுபவர்கள் பற்றி ரசிகர்கள் தகவல் அளிக்கலாம்.

இவை போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்திற்கு ஆடை கூட அணியாமல் அண்டர்வேருடன் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கப்சா கிரிக்கெட் ரசிகர் நமது கப்சா நிருபருக்கு பேட்டி அளித்தார்: “கண்கள் இரண்டால்.. என்ற ஒரே ஒரு ஹிட் பாடலுக்கு மட்டும் இசை அமைத்து ஒன் பிலிம் ஒண்டாராகி போன ஜேம்ஸ்வசந்தன் சும்மா கிடந்த குரக்கை சொரிந்து விட்ட மாதிரி இளைஞர்கள் ஐ.பி.எல் போட்டியை புறக்கணித்தால் உலக அளவில் கவனத்தை ஈர்க்கலாம் என ஐடியா கொடுத்து கெடுத்து விட்டார். போதாக் குறைக்கு கலைப்போலி காலா ஆன்மிக அரசியல் வல்லுனர் ரஜினி சி.எஸ்.கே வீரர்கள் செவ்வாய்கிழமை சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் கருப்புப் பட்டை அணிய விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசும் இங்குள்ள நிலவரத்தை ஐபிஎல் நிர்வாகத்திடம் சுட்டிக் காட்டியது. ஆனால் ஐபிஎல் நிர்வாகம் பிடிவாதமாக இங்கு ஐபிஎல் போட்டிகளை நடத்துகிறது. பாஜக அழுத்தம் காரணமாக தமிழ்நாடு அடிமைகள் அரசும் அனுமதி மறுக்காமல், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது. இப்போது போட்டியே இந்திய மத்திய அரசுக்கும் காவிரி மேலான்மை வாரியத்துக்காக போராடும் தமிழக குழுக்களுக்கும் அதாவது இந்திய அணியும் தமிழக அணியும் பலப்பரீட்சை செய்ய உள்ளன.” என்றார்.