காவேரி மருத்துவமனைக்கு வெளியே திரண்டிருந்த உடன்பிறப்புக்கள், `கருணாநிதி உடல்நிலை குறித்து ஏதோ மோசமான அறிவிப்பு வெளியாகப் போகிறது’ என்று எண்ணிக்கொண்டனர். இதனால், பரபரப்பும் பதற்றமும் நிமிடத்துக்கு நிமிடம் அதிகமானது. ஆனால், காவேரி மருத்துவமனையிலிருந்து இரவு 9.50 மணிக்கு வெளியான செய்திக்குறிப்பு, வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்ததுடன், வதந்தியால் ஏற்பட்ட அதிர்ச்சியைவிடக் கூடுதலான மகிழ்ச்சியைத் தொண்டர்களுக்குக் கொடுத்தது.
`வதந்திக்கு எந்தளவுக்கு வலு இருக்கிறது’ என்பதற்கான நேரடிக் காட்சிகளை, அண்மையில் காவேரி மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே பார்க்க முடிந்தது. இரவு 8.50 மணியளவில் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து வெளியான பதிவுகள், வதந்தியால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியது. “அண்ணா மேம்பாலம், ஆழ்வார்பேட்டை, ஆயிரம் விளக்கு உள்ளிட்டப் பகுதிகளில் துணை ராணுவத்தினர் குவிப்பு, தி.மு.க தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் விளக்குகள் அணைக்கப்பட்டன.
‘மிக முக்கியமான அறிவிப்பை’ காவேரி மருத்துவமனை சில நிமிடங்களில் வெளியிட உள்ளது. சிகிச்சைக்காகக் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடைகளை அடைக்கச் சொல்லி போலீஸார் உத்தரவு, அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் திங்கள்கிழமை (இன்று) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு” என்பன போன்ற 50-க்கும் மேற்பட்ட தகவல்கள், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வேகமாகப் பரவத் தொடங்கின.
கூடுதலாக, ‘பால் விநியோகம் திங்கள்கிழமையன்று முழுமையாகத் தடை செய்யப்படும்’ என்று வெளியான தகவல்கள் குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரையும் சேர்த்தே பயமுறுத்தியது. இத்தகைய வதந்திகள் குறித்து ஒவ்வொன்றாக விசாரிக்கத் தொடங்கினோம். அண்ணா பல்கலைக்கழக மக்கள் தொடர்புப் பிரிவினர், “அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து, தேர்வுகள் தள்ளிவைப்பு தொடர்பான எந்தத் தகவலும் வெளியிடப் படவில்லை. திங்கள்கிழமையன்று (இன்று) வழக்கம்போல் தேர்வுகள் நடைபெறும். அனைத்துப் பணிகளும் எப்போதும்போல் நடக்கும்” என்றனர். துணை ராணுவம் குவிப்பு பற்றி கேட்டபோது, “அண்ணா மேம்பாலத்திலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் இதுபோன்ற பாதுகாப்புப் படையினர், கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவது நடைமுறையில் உள்ளதுதான்.
அதேபோல் மேம்பாலத்தில் சென்னை போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ள ‘வஜ்ரா’ வாகனங்களும் எப்போதும் நிறுத்தப்பட்டிருக்கும். இவை அனைத்தும், அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளே. பாரா-மிலிட்டரி படையினர், இரவு நேரத்தில் கொஞ்சம் ஆங்காங்கே ‘மூவ்’ செய்யப்படுவார்கள். இதுவும் நடைமுறையில் உள்ளதுதான். நள்ளிரவில் சென்னைக்குள் சுற்ற வாய்ப்பில்லாதவர்கள், பாரா மிலிட்டரியின் இந்த மூவ்மென்ட்டைப் பார்த்துவிட்டு, ‘துணை ராணுவம்’ குவிப்பு என்று வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். கூடவே, போலீஸ் வஜ்ரா வாகனங்களும் குவிக்கப்பட்டிருக்கிறது என்று கிளப்பிவிட்டார்கள்” என்றனர்.
கருணாநிதி வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பற்றி கோபாலபுரத்தில் பாதுகாப்பில் இருந்த போலீஸாரிடம் விசாரித்தோம். “காவேரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக கருணாநிதி அனுமதிக்கப்பட்ட பின்னரும், ஒரு சிலர், கோபாலபுரத்தைவிட்டு நகரவில்லை. ‘கருணாநிதியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை; அவரை வீட்டிலேயே ரகசியமாக வைத்து சிகிச்சை கொடுக்கிறார்கள்’ என்றெல்லாம் அங்கு கூடி நின்றவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
சிலர், வீட்டின் வாசலில் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். தலைவர் மீது கொண்ட பிரியத்தால் செல்ஃபி எடுக்கிறார்கள் என்று நினைத்தால், நேரம் செல்லச் செல்ல கருணாநிதியின் வீட்டுக்குள் நுழைய சிலர் முயன்றனர். இது பற்றிக் கருணாநிதி குடும்பத்துக்கும் மேலிடத்துக்கும் தகவல் சொன்னோம். ‘தடுப்புகளை நெருக்கமாக வைத்தபோதிலும் அவற்றையும் மீறி நடப்பவர்களை எச்சரித்து அனுப்பப் பாருங்கள்’ என்று ரிப்ளை வந்தது. அதன் பின்னர்தான், கருணாநிதியின் வீட்டு வாசலில் இருந்த அனைத்து முகப்பு விளக்குகளும் அணைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்” என்றனர் போலீஸார்.
காவேரி மருத்துவமனையில் கருணாநிதி திரும்ப வரமாட்டார் என திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாணி குவார்ட்டர் தீர்ந்ததாலும், அழகிரி தன் பங்குக்கு ஏற்பாடு செய்த தயிர் சாதம் மீதமிருந்ததாலும், உடன்பிறப்புக்களும், உளுத்தம்பருப்புக்களும் மருத்துவமனை வளாகத்தை விட்டு கலைந்து செல்லாமல் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கப்சா செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.