கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் கமல் அறிவித்த நிலையில் அவர் இரட்டை வேடம் போடுவதாக ரசிகர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். கேரள மாநிலம் கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதி குவிந்து வருகிறது. தமிழகத்தில் நடிகர்கள் கார்த்தி, சூர்யா இணைந்து முதன் முதலாக கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதி அறிவித்தனர். இதனை தொடர்ந்து நடிகர் கமல் தனது பங்காக கேரளாவிற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்தார். மேலும் ரசிகர்களும் கேரளாவிற்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கமலின் இந்த செயல் தான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. ஏனென்றால் கடந்த 2015ம் ஆண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டது.
அப்போதும் நடிகர்கள் பலர் நிவாரண நிதி அளித்தனர். அந்த சமயத்தில் நடிகர் கமலிடம் வெள்ள நிவாரண நிதி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கமல், ஏன் நான் வருமான வரி செலுத்தவில்லையா? மக்கள் செலுத்தும் வருமான வரி எல்லாம் என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது வருமான வரி செலுத்தியிருக்கும் போது நான் எதற்கு வெள்ள நிவாரண நிதி கொடுக்க வேண்டும் என்கிற ரீதியில் கமல் அப்போது பேசியிருந்தார். இந்த நிலையில் கேரளாவில் வெள்ளம் என்றதும் யாரும் கேட்காமலேயே கமல் 25 லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்துள்ளார். கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதியை கமல் கொடுத்தை ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் தமிழகத்திற்கு தரமாட்டேன் என்று கூறிய கமல் தற்பேது கேரளாவுக்கு மட்டும் ஓடோடி சென்று உதவுவது ஏன் என்று ரசிகர்கள் வினவுகின்றனர். மேலும் அரசியலுக்கு வந்துவிட்டதால் மக்களின் அபிமானத்தை பெற கமல் வெள்ள நிவாரண நிதியை கொடுத்துள்ளாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
தன் படத்துக்கு சிக்கல் வந்தபோது, ‘‘நாட்டை விட்டு வெளியேறுவேன்’’ என டுபாக்கூர் ‘விஸ்வரூபம்’ எடுத்தார் கமல். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, அவர் காட்டிய அதிகபட்ச எதிர்ப்பு இதுதான். சென்னையை பெருவெள்ளம் புரட்டிப்போட்டபோது, ‘‘மக்கள் வரிப்பணம் எங்கே போனது? அரசு நிர்வாகம் செயலிழந்துவிட்டது’’ எனத் தெரிவித்தார் கமல்ஹாசன். ஆனால் பிறகு ‘‘வேறு மாதிரியாக எழுதிவிட்டார்கள்’’ என ஜகா வாங்கினார். ஜெயலலிதா இறந்த பிறகு, கமலுக்கும் வீரம் வந்துவிட்டது. ‘107 செயற்கை உறுப்பினர்களை ஏவியவரைவிட 104 செயற்கைக் கோள்களை ஏவியவரே போற்றுதலுக்குரியவர்’ என கூவத்தூர் கூத்தை கிண்லடித்தார். ‘தப்பான ஆளு, எதிலும் வெல்லும் ஏடாகூடம்’ என்றெல்லாம் கமல்போட்ட ட்வீட்கள் தமிழக அரசியலைத் திணறடித்தன.
சென்னை: வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு செயலிழந்துவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளதற்கு நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்தார். சென்னையை புரட்ட பெருவெள்ளம் குறித்து பேட்டியளித்திருந்த கமல்ஹாசன் தமிழக அரசை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 100 ஆண்டு காலம் கண்டிராத கன மழை வெள்ளத்தால் தத்தளித்து தவிக்கின்ற சென்னை மாநகரம் மற்றும் ஏனைய மாவட்ட மக்களைக் காப்பாற்றி, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு எனும் முப்பரிமாணத்தில், போர்க்கால நடவடிக்கை என்பதற்கும் மேலான அவசர கால அடிப்படையில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா” அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள். இந்த அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஆறுதலாகவும், கடமையே கண்ணாகக் கொண்டு செயல்படும் “மாண்புமிகு அம்மா” அவர்களது அரசுக்கு ஆதரவாகவும், உறுதுணையாக இருக்க வேண்டியதை விடுத்து, உள்ளிருந்து கொல்லும் நோய்போல.
நடிகர் திரு.கமலஹாசன், தன்னிலையும், முன்னிலையும் மறந்து, அரசு நிர்வாகம் செயல் இழந்துவிட்டதாகவும், நிவாரண நிதிக்கு அரசு அவரிடம் பணம் கேட்டது போன்றும், நிவாரணப் பணிகளைச் செய்யத்தானே அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றும், மக்களின் வரிப்பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லை என்றும், தனது தகுதி மீறிய, தடுமாற்றமான, தவறான கருத்துக்களை இணையதளம் ஒன்றுக்கு பேட்டியாக அளித்துள்ளதாக 4-12-2015 அன்று ஓரிரு நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது. எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமலஹாசன், இந்த விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் தொடங்கியதிலிருயது இன்றைய தினம் வரை, சென்னை மாநகர் மட்டுமின்றி, மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதன் பாதிப்பிலிருயது தமிழக மக்களைக் காப்பாற்ற, “மாண்புமிகு அம்மா” அவர்கள் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகவும், “மாண்புமிகு அம்மா” அவர்களின் ஆணைப்படி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் துரித நடவடிக்கைகளின் காரணமாகவும், மழை வெள்ளப் பாதிப்புகளிலிருயது தமிழக மக்களின் உயிர்ச்சேதம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு, இயல்பான நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.
இந்தச் சூழ்நிலையில் இப்படி தரமற்ற முறையில் பேட்டி அளிப்பதற்கு 1918 ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுபோன்ற கனமழை பெய்யவில்லை என்பதையும், ஒரே நாளில் 40 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்து, இந்தப் பருவம் முழுவதும் பெய்யும் மழையைவிட பல மடங்கு கூடுதலான மழை, ஒரு சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்தது என்பதையும் திரு.கமலஹாசன் தெரிந்து கொள்ளாமலேயே, தனது விதண்டாவாதக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். கமலஹாசன் எடுக்கின்ற திரைப்படத்தில் வேண்டுமானால், எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் என்றாலும், அதை ஒரே காட்சியில் சீர்படுத்தி விடுவதாகவும், ஒரே பாடலில் அதை சரிப்படுத்தி விடுவதாகவும் காட்டிவிடலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு. எதிர்பாராத வகையில் இயற்கை நம்மைத் தாக்கும்போது, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு என படிப்படியாக நிவாரண நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலமாகத்தான் மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். அதைத்தான் “மாண்புமிகு அம்மா” அவர்கள் தற்போது சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கமலஹாசன் பெரிய நடிகர் என்பதற்காகவோ, அவர் பெரிய, பெரிய படங்களை எடுக்கிறார் என்பதற்காகவோ, அவரது பிதற்றல் மொழிகளை கேட்டுக் கொண்டிருக்க முடியாது. “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா” அவர்களின் மீது முழு நம்பிக்கையும், பாசமும் வைத்துள்ள தமிழக மக்கள் அதனை நிச்சயமாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ, நம்பவோ மாட்டார்கள் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன். என்று கமல்ஹாசனை ‘கழுவி’ ஊற்றியிருந்தார்.