பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்து விட்டது… இதற்கு என்ன காரணம்? நாங்குநேரி, விக்கிரவாண்டி இந்த இரு தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் அதிமுக, திமுகவுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

ஏனெனில் இந்த இரு தொகுதிகளின் வெற்றிதான் உள்ளாட்சி தேர்தல் முதல், வரப்போகும் சட்டமன்ற தேர்தல் வரை அடிகோலும் என்பதால்தான்.. அதனால்தான் இரு கட்சிகளுமே இடைத்தேர்தல் என்றுகூட பார்க்காமல் களத்தில் குதித்தன! விக்கிரவாண்டியை பொறுத்தவரை திமுக அதிக நம்பிக்கையை ஆரம்பத்தில் இருந்தே வைத்து விட்டது.

இதற்கு காரணம் உதயசூரியன் சின்னத்தை தந்த தொகுதி என்பதுடன் வன்னியர்களின் செல்வாக்கும் ஓரளவு தனக்கு இருப்பதாகவே நம்பியது. இதற்காகவே அதிமுகவை போல, திமுகவும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவரை நிறுத்தியது.

ஆனால், பாமகவுடன் திமுகவுக்கு ஏற்பட்ட உரசல்தான் இப்போது திமுகவின் பின்னடைவுக்கு காரணமாகி விட்டது. எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் வன்னியர் சமுதாயம் குறித்த பேச்சினை இந்த முறை ஸ்டாலின் கையில் எடுத்தார். ராமதாஸை ரொம்பவே டேமேஜ் செய்யும் வகையில் பேசினார். இதை விக்கிரவாண்டி ரசிக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

‘திமுக ஆட்சிக்கு வந்தால் 20 சதவீத ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், சின்னம் தந்து உதவிய மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தெரிவித்ததும் ஓட்டு வங்கியை பலப்படுத்தும் பேச்சாக பார்க்கப்பட்டது.

இதைதான் பாமக நிறுவனர் ராமதாஸும், அன்புமணியும் விமர்சிக்க ஆரம்பித்தனர். இவ்வளவு காலம் இல்லாமல், இப்போதுதான் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டுமா? கோவிந்தசாமி அவ்வளவு அக்கறை இருந்தால், அவர் மகன் சம்பத்துக்கு சீட் தர வேணடியதுதானே என்று கேட்டிருந்தனர். இதுதான் திமுகவுக்கு முதல் பிரச்சனையாக வெடித்தது.

இதையடுத்து, பிரச்சாரத்துக்கு போன ஸ்டாலின் அசுரன் படம் பார்த்துவிட்டு வந்தார். அத்துடன் ஒரு பதிவையும் ட்விட்டர் போட்டார், தனுஷையும் வெற்றிமாறனையும் பாராட்டி விடாமல், பஞ்சமி நில உரிமை மீட்பு சமாச்சாரத்தை வைத்து அந்த பதிவை வெளிப்படுத்தி இருந்தார்.

இங்குதான் திமுக – அதிமுகவுக்கும் தேர்தல் என்பது போய், திமுக – பாமக நேரடி மோதல் என்ற அளவுக்கு முட்டிக் கொண்டன. “முரசொலி ஆபீஸ் இருப்பதே பஞ்சமி நிலம் தான்… முரசொலி ஆபீசில் வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் திரும்பவும் ஸ்டாலின் ஒப்படைப்பார் என்று நம்புவோம்.. பட்டாவை மட்டும் காட்டினா எப்படி, மூலப்பத்திரம் எங்கே” என்று கேட்டு ராமதாஸ் கொக்கி போட்டார்.

இந்த விவகாரம்தான் திமுகவுக்கு அடுத்த பிரச்சனையாக வெடித்தது. சோஷியல் மீடியாவில் ஸ்டாலின் – ராமதாஸ் கருத்துக்கள் சர்ச்சையாகி வெடித்து கொண்டிருந்தன.

ஆனால், ஏற்கனவே களத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த எடப்பாடியாருக்கு இது சாதகமாகிவிட்டது. இறங்கி அடித்தார்.. கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைத்தது.. பாஜகவை கிட்ட சேர்க்காமல் பார்த்து கொண்டார்..

அன்புமணி, ராமதாஸின் மூலம் மொத்த வன்னியர்களின் வாக்குகளை வசப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்.. மிச்சம் மீதி இருந்ததையும் விஜயகாந்த்தை வரவழைத்து வாரி சுருட்டி கொண்டார்.. மொத்த தொகுதியையும் வசப்படுத்தினார்.. தேனி பார்முலாவை விஸ்தரித்தார்.. சிவி சண்முகத்தை முழுசாக நம்பினார்.. நிர்வாகிகளின் ஒத்துழைப்பு பூரணமாக கிடைத்தது.. பிரதமரை இங்கு வரவழைத்து முழு பலத்தை தமிழக மக்களிடம் காட்டினார்.. இப்போது வெற்றியை வசப்படுத்தி விட்டார்.

பொன்முடியின் ஆதரவும், நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இருந்தாலும் பொன்முடியின் சில பிடிவாதங்களும் கட்சியின் சரிவுக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள். அதாவது எல்லாமே தன்னால்தான் நடக்க வேண்டும் என்ற கோணத்தில் பொன்முடி நடந்து கொண்டதால்தான் திமுகவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டதாக சொல்கிறார்கள். இன்று திமுக சோடை போயுள்ளதற்கு அதன் அபரிமிதமான நம்பிக்கையே காரணம் என்பதில் சந்தேகமே இல்லை.

நாங்குநேரி சட்டமன்றத்துக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கோட்டையைத் தகர்த்து அ.தி.மு.க வெற்றியைக் கைப்பற்றியிருக்கிறது. அ.தி.மு.க-வின் பிரசார வியூகத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே இதை அக்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள்.

இதுகுறித்து கப்சா நிருபரிடம் ஸ்டாலின் துண்டு சீட்டைப் பார்த்து கூறியதாவது: “ஜெயக்குமார் கூறியது போல அதர்மம் தோற்றது தர்மம் வென்றது, ஆம் வாக்களர்களுக்கு நீங்கள் செய்த தர்மம் (பிச்சைப் பணம்) மூலம் எங்கள் திருமங்கலம் பார்முலா எங்களுக்கு எதிராக வென்றது.” என்றார்.

பகிர்