ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடுக்காட்டுப்பட்டிக்கு வந்தார். அவருடன் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களும் வந்திருந்தனர். சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் முன்னதாக சுஜித் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தகவல் கிடைத்ததும் உடனடியாகச் சம்பவ இடத்துக்குச் செல்ல அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அறிவுறுத்தினேன். எப்படியாவது சுஜித்தை உயிரோடு மீட்க வேண்டும் என எண்ணியே செயல்பட்டோம். ஆனால், முயற்சிகள் பலனளிக்கவில்லை. அரசைப் பொறுத்தவரை எல்லா உதவிகளையும் செய்தோம்.

ஓபிஎஸ் நேரில்வந்து பார்த்து மீட்புப் பணிகள் குறித்து என்னிடம் ஆலோசித்தார்.சுஜித்தை உயிரோடு மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் இரவுபகல் பாராமல் நாங்கள் உழைத்தோம். இப்படிப்பட்ட சம்பவம் கடந்த காலத்திலும் நடைபெற்றது. அப்போது எல்லாம் இவ்வளவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவில்லை.

ஆனால் ஸ்டாலினோ, மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாகத் தான் சிறுவன் உயிரிழந்தான் என்ற தவறான கருத்தைக் கூறியிருக்கிறார். எந்த அளவுக்கு அரசு இயந்திரம் இந்த விவகாரத்தில் உழைத்தது என்பதை ஊடகங்களில் காண்பிக்கப்பட்டது. இங்கேயே அமைச்சர் எத்தனை நாள் உட்கார்ந்திருந்தார் என்பதை அனைவரும் பார்த்தனர். ஆனால் ராணுவத்தைப் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறியிருக்கிறார் ஸ்டாலின்.

இதேபோல்தான் முக்கொம்பு அணை உடைந்தபோதும் ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறினார். ஆனால் ராணுவமே தமிழகப் பொதுப்பணித் துறையைப் பாராட்டிச் சென்றது. இப்போதும் NDRF, NLC, ONGC என முக்கிய துறை, நிறுவனங்களை வரவழைத்துச் செயல்பட்டோம். தி.மு.க ஆட்சியில் தேனி அருகே இதேபோன்று ஒரு சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான். அப்போதும் அந்தச் சிறுவனை அவர்கள் இறந்த நிலையில்தான் மீட்டார்கள். இதைக் குற்றச்சாட்டாகச் சொல்லவில்லை.

இவ்வளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறுவனை உயிரோடு மீட்கப் போராடினோம். ஆனால், அவர்கள் ஆட்சியில் எந்த விதத் தொழில்நுட்பமும் இல்லாமல், 6 வயதுச் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை.அப்போது ஏன் ஸ்டாலின் ராணுவத்தை அழைக்கவில்லை. வேண்டுமென்றே அரசு மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

தொடர்ந்து இதையேதான் அவர் செய்து வருகிறார். இந்த விவகாரத்தில் அரசின் பணியைப் பாராட்டிய வைகோவுக்கு நன்றி சொல்கிறேன். இதுபோன்ற மனிதாபிமான செயல்களில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்” என்றவரிடம், `எந்தெந்த இடத்தில் பாறைகள், மணல் இருக்கும் என்பது கனிம வளத்துறைக்குத்தான் தெரியும்.

அது தெரியாமல் குடிநீர் வடிகால் வாரியத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு முன்வைத்துள்ளாரே ஸ்டாலின் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “எல்லாம் தெரிந்த விஞ்ஞானியாக இருக்கிறாரே அப்புறம் ஏன் 2009ல் 6 வயதுச் சிறுவனை இதை எல்லாம் பயன்படுத்தி மீட்கவில்லை.இறந்துதானே அவரை மீட்டார்கள். இப்போது 2 வயதுச் சிறுவன். அப்போது விழுந்தது 6 வயதுச் சிறுவன். தேனி நிகழ்வின் போது ஸ்டாலின் அங்கு சென்றிருந்தாரா.. அமைச்சர்கள், அதிகாரிகள் சென்றார்களா.. இல்லையே. அரசியல் காழ்புணர்ச்சியோடு பேசுகிறார்.

மனசாட்சியைத் தொட்டுப்பார்த்து பேசினால் அவர் இப்படி பேசியிருக்கமாட்டார். அவர் சொல்வது அனைத்தும் பொய். முடிந்தளவுக்கு உயிரோடு மீட்க வேண்டும் என்றே பணிபுரிந்தோம். ஆனால், அது முடியாமல் போனது வருத்தத்தை அளிக்கிறது. பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணற்றை மூடுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்” எனக் கூறினார்.இதற்கிடையே, சிறுவன் சுஜித் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மலர்வளையத்துடன் முதல்வர் வருகையை எதிர்பார்த்து அதிகாரிகள் காத்திருந்தனர்.

ஆனால் முதல்வர் அங்கு வரவில்லை என்பதால் கடைசியில் அதிகாரிகளே சிறுவன் சுஜித் படம் இருந்த இடத்தில் மலர்வளையத்தை வைத்துவிட்டு கிளம்பிவிட்டனர். முதல்வர் சென்ற பிறகு பேசிய சுஜித்தின் தந்தை, “சுஜித்தை மீட்க அரசும், அதிகாரிகளும் இடைவிடாமல் செயல்பட்டனர். அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நிதியுதவி அறிவித்தார்கள் அதற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

சுஜித்தின் தாய் 12 வரை படித்துள்ளார். அவரின் படிப்புக்கு ஏற்ற அரசு வேலைக்கு ஏற்பாடு செய்தால் உதவியாக இருக்கும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன். அதைப் பரிசீலிப்பதாக உறுதிகொடுத்துள்ளார்” எனக் கூறினார். முன்னதாக எடப்பாடி 10 லட்சம் நிதி அறிவித்தார். ஸ்டாலின் 10 லட்சம் நிதி அறிவித்ததும், எடப்பாடி மீண்டும் 10 லட்சம் நிதி சேர்த்து ஆகா மொத்தம் முப்பது லட்சம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது

பொறுப்பற்ற பெற்றோரால் இறந்த சுஜித் வில்சனுக்கு 30 லட்சம் வழங்கியதை போல டிவி நிகழ்ச்சியில் மூழ்கியதால் தூத்துக்குடியில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி ஒரு குழந்தை இறந்துள்ளது. ஆகவே இந்த பொறுப்பற்ற செயலை பாராட்டி இங்கும் 30 லட்சம் வழங்க வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறேன். சுஜித்திற்கு ஒரு ஞாயம் ரேவதிக்கு ஒரு ஞாயமா.இறந்த குழந்தையின் குடும்பத்தார் என்ற வகையில் அந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது ஏற்புடையது தான்.

ஒரு குழந்தையின் இறப்புக்கு காரணமானவன் என்ற வகையில் அவன் தண்டிக்கப்பட வேண்டியவன் தானே.. இறந்தது அவன் குழந்தையாக இல்லாமல் அடுத்தவர் குழந்தையாக இருந்தால் இந்நேரம் சிறையில் அடைத்திருக்குமே இந்த அரசு. மீட்பு பணியில் 80 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்தது அரசின் கடமை. (11 கோடி கணக்கு காட்ட) மேற்கொண்டு போட்டி போட்டு இந்த விசியத்தில் அரசியல் வேண்டாம் என கூறிய திமுக மீட்புபணியால் அதிமுகவிற்கு நல்ல பெயர் வரக்கூடாதென 10 லட்சமும், நீ 10 கொடுத்தால் நான் உன்னைவிட அதிகமாக தருவேன் என அரசு+ அதிமுக 20 லட்சம் கொடுப்பது பிண அரசியல் தான்.

கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை செய்பவர்கள் இதை கொஞ்சம் பரிசீலனை செய்யவும்…என குழி தோண்டி குடிமகன் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அப்பலோ அம்மா இட்லியை விட இந்த பதினோரு கோடி அதிகமா இருக்கே என்றும் என்றும் உதட்டை பிதுக்கினார்.

பகிர்