கொரோனா தொற்றில் இருந்து செல்லூர் ராஜூ குணமடைந்து நலமுடன் வீடு திரும்பியதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஒன்றரை கோடி பேரை தொட்டுள்ளது கொரோனா வைரஸ். 80 லட்சம் பேர் வரை கொரோனாவில் இருந்து மீண்டிருக்கின்றனர். கொரோனாவிற்கு ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், அரசு அதிகாரி, அரசியல்வாதிகள் என்றெல்லாம் வித்தியாசம் தெரியாது.
தகுதி உள்ளவர்கள் தப்பிப்பிழைப்பார்கள் என்ற தத்துவத்தை இந்த நோய்க்கு நாம் பொருத்தி பார்த்துக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் உள்ளவர்கள் இந்த நோயில் இருந்து போராடி மீண்டு விடலாம். தமிழகத்தில் 1,56, 369 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.1,07,416 பேர் குணமடைந்துள்ளனர். 2,236 பேர் மரணமடைந்துள்ளனர். எம்எல்ஏக்கள், அமைச்சர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் நிலோபர் கபீல் ஆகிய நான்கு அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அமைச்சர் கே.பி. அன்பழகன் சில தினங்களுக்கு முன்பு பூரண நலத்துடன் வீடு திரும்பினார். இப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள கப்சா செய்திக்குறிப்பில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கடந்த ஜூலை 08 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்லூர் ராஜூ. ஆஸ்பத்திரியில் தெர்மாகோல் உருண்டைகள் வடிவில் இருந்த மாத்திரை உண்டதாலும், மேற்கூரை தெர்மாகோலால் ஃபால்ஸ் சீலிங் செய்திருந்த்தாலும் பூரண நலத்துடன் இன்று வீடு திரும்பியதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.