மருத்துவ படிப்பில் 7.5 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீடு காரணமாக 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு தற்போது நனவாகியிருக்கிறது

இளநிலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வில், சிபிஎஸ்இ பாடத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால், மாநில பாடத்திட்டத்தில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதை கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில், 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடியில் மளிகை கடையில் வேலை செய்து வருபவர் செந்தில்குமார். இவரின் மகன் ஹரிகிருஷ்ணனின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது. இதனிடையே, களக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தை சேர்ந்த அன்பரசன், மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதி 440 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதேபோன்று, அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றுபவரின் மகள் ஷோபனா மற்றும் ஆட்டோ ஓட்டுநரின் மகன் நரசிம்மன் உள்ளிட்டோரும், அரசுப் பள்ளியில் பயின்று, தங்களது மருத்துவர் இலக்கை எட்டியுள்ளனர்.

நீட் தேர்வு காரணமாக முந்தைய ஆண்டுகளில், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்த எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்தது. ஆனால், நடப்பு ஆண்டு 7.5 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீடு காரணமாக 405 மாணவர்கள், மருத்துவ கல்வி கற்கும் வாய்ப்பு கனிந்துள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்..

“தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் உரிய பயனடைய வேண்டும் என்னும் நோக்கில், திமுக பல தளங்களிலும் முன்னெடுத்த தொடர் போராட்டங்கள் மற்றும் அழுத்தம் காரணமாக, எடப்பாடி அதிமுக அரசு தற்போதாவது இறங்கிவந்து ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழக அரசிடம் இந்த அதிகாரம் இருக்கிறது என்றால் – ஏன் மசோதா நிறைவேற்றினார்கள், ஏன் ஆளுநருக்கு அனுப்பி – அனைத்துத் தரப்பிலும் பதற்றத்தை ஏற்படுத்த, இத்தனை மாதம் கிடப்பில் போட்டார்கள் என்பது தனி விவாதத்திற்குரியது; விளக்கம் தரப்பட வேண்டியது. இவ்வளவு காலம் மாணவர்களையும், பெற்றோரையும் ஏக்கத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கியது ஏன் என்பது தனிக் கேள்வி என்றாலும், மேலும் தாமதிக்காமல் இந்த இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்திட, உடனடியாக கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஒருமனதாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா தமிழக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. திமுக சார்பில் கடிதம் எழுதி – போராட்டம் நடத்தி – மத்திய உள்துறை அமைச்சருக்குத் திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் எல்லாம் கடிதம் எழுதி கோரிக்கை வைத்தும், மத்திய பாஜக அரசோ – தமிழக ஆளுநரோ தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த இட ஒதுக்கீடு குறித்து இதுவரை கிஞ்சித்தும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை; மசோதாவிற்கு ஒப்புதல் கொடுங்கள் என்று ஆளுநருக்கு உரியபடி அறிவுறுத்தவும் இல்லை! இந்தச் சூழ்நிலையில் அதிமுக அரசும் – தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி – பாஜகவுடன் கூட்டணியாக உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவதற்குப் பதில் – இப்போது அரசாணை வெளியிட்டிருக்கிறது. இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால், இந்த உத்தரவை 45 நாட்களுக்கு முன்பே வெளியிட்டிருக்கலாம். இந்த அரசாணை சரியா தவறா – அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பொது விவாதம் இப்போது தொடங்கிவிட்டது.

இதற்கிடையில் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆளுநரின் ஆணைப்படி (‘By order of Governor’) என்று வெளியிட்டிருப்பது – வழக்கமான நிர்வாக நடைமுறையா அல்லது ஆளுநரிடம் அந்தக் கோப்பில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளதா? என்பதும் தெரியவில்லை. இதுகுறித்தெல்லாம் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

இவை ஒருபுறமிருக்க, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்தும் வகையில், உடனடியாக மருத்துவக் கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து – மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் என்றும், அரசாணை வழியாக வழங்கப்பட்டுள்ள இந்த இட ஒதுக்கீட்டிற்கு, எவ்வித இடையூறும் நேர்ந்து விடாமல் தடுக்க வேண்டிய மிக முக்கியக் கடமையை அதிமுக அரசு கண்ணும் கருத்துமாக – மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கை உணர்வுடனும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கல்லூரி மாணவர்களை ஆல் பாஸ் செய்து பட்டையைக் கிளப்பிய ஆல்-பாஸ் அதிமுக தற்போது ‘பிளான்-பண்ணி’ நீட் தேர்வு சமாச்சாரத்தில் 7.5 இட ஒதுக்கீட்டு தந்திரத்தை கையாண்டு சுடலைக்கு தேர்தலில் சாவு மணி அடிக்க கிளம்பி உள்ளது.

பகிர்